Posted by: Abdul Qaiyum | January 23, 2010

தென்றல்

தென்றல் : கவிஞர் கண்ணதாசன் சென்னையிலிருந்து கவிதைக்காகத் தரமாக 1953 இல் தெடங்கித் தொடர்ந்த மரபுப்பாடல்கள் உள்ள இதழ். வெண்பா போட்டி, அரசியல் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், தொடர்கள், திரை விமர்சனம் என வெளியிட்டுள்ள இதழிது.

முயற்சியால் முன்னேறியவர்களை வழிகாட்டியாக ஏற்றிடுவீர்
உழைத்து உயர்ந்தோரைப் புத்தகமாகப் படியுங்கள்
- இளைஞர்களுக்கு கருணாநிதி அறிவுரை

சென்னை, அக் 27- உழைத்து உயர்ந்தவர்களைப் புத்தகமாகப் படிக்க வேண்டும் என்று இளைஞர்களுக்குக் கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி சிந்தனையும் செயலும் எனகிற தலைப்பில் அவர் எழுதியதாவது-

நான், என இளமைப் பருவத்திலிருந்து எழுதிய கவிதைகள் பெரியதோர் புத்தகமாக அச்சியற்றப் பெற்று 1107 பக்கங்கள கொண்ட அப்புத்தகம், கவிதை மழை எனும் பெயரால் சென்னை சீதை பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய நண்பர் சின்னக் குத்தூசி அந்த அணிந் துரையின் ஆரம்பமாக-

‘தட்டிக் கொடுக்கப்படாமலே பூரணத்துவத்தை நோக்கி வளரக் கூடியவன் முதல் தரக் கவிஞன் என்று ஒரு கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் அரூப் தருமோ சிவராமு என்கிற பிரமீள்!

என்று எழுதியுள்ளதையும் படித்துவிட்டு, ‘பூரணத்துவத்தை நோக்கி வளரக் கூடியவன் தான்- வளர்ந்து விட்டவனல்லன் என்ற கணக்கை என்னைப் பற்றிப் போட்டுக் கொண்டிருப்பவன்” என்ற முறையில் இன்றைய சிந்தனையும் செயலும் பற்றிச் சில சொல்லுகிறேன்.

நான் அன்றாடம் உடன பிறப்புகளுக்கு தொடர்ந்து எழுதும் கடிதங்களில் ”மு.க.” என்று மட்டும் குறிப்பிட்டு முடிப்பதும்- தமிழில் மற்றவர்களுக்கு எழுதும் கடிதங்களில் எல்லாம் மு.கருணாநிதி என்றே கையெழுத்திட்டு அனுப் புவதுமான பழக்கத்தைக் கொண்டிருக்கிறேன்.

1937-38-ம் ஆண்டில் 13 அல்லது 14-ம் வயதில் நான் எழுதி இன்று வரை அச்சியற்றி வெளியிடப்படாமல் பாது காக்கப்படும் ‘செல்வ சந்திரா” எனும் நவீனத்துக்குத் தீட்டியுள்ள முன்னுரையில் ‘கூ.ஆ. கருணாநிதி” என்றே கையெழுத்திட்டிருக்கிறேன். அந்த நவீனத்தை நானே இப்போது படித்துப் பார்த்தால் எனக்கே கூச்சமாக இருந்தாலும்கூட அந்தப் பிஞ்சுப் பருவத்திலேயே அந்த முன்னுரையில் என கையெழுத்திலேயே-

‘தற்கால திராவிட நாடு, ஜாதி என்ற வலையில் சிக்கி, திராவிடரது கலை, நாகரீகம் எல்லாவற்றையும் சிற்சில மூட நம்பிக்கைகளால் இழந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது” என்பதை எத்துணை நெஞ்சுத் துடிப்போடு வெளியிட்டிருக்கிறேன் என்ற வேதனை உணர்வும் பொங்கிடத்தான செய்கிறது.

கடற்கரையோரத்து ஈர மணலில் நண்டுகள் ஓடிப்பதிந்த கோடுகளைப் போல அன்றிருந்த என தமிழ் எழுத்துத் திறனும் வடிவும் இன்று ஓரளவு தரமாகத் தென்படுகின்றதென்றால்- இடையில் இந்த எண்பதாண்டு கால முயற்சியும் உழைப்பும் வீண் போகவில்லை என்பதைத்தானே அது புரிய வைக்கிறது! சுயபுராணம் என்று கருதி யாரும் மனத்துக்குள் சிரிக்கக்கூடாது- முழுமையை முழுமையாகப் பெறாவிட்டாலும் முழுமையை நோக்கி ஒரு குறிப்பிட்ட தொலைவாவது என்னைப் போலக் கடந்து அடைந்திட எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாம் இளைஞர்களும், மாணவர்களும் தங்களின சுய வலிமையை உணர்ந்து, அதனைப் பெருக்கிக் கொண்டு வளர்ந்திட, வாகை சூடிட- இன்றைய சிந்தனையும் செயலும் சிறப்பாகப் பயன்படுமென்ற மன உறுதி மலைப்பாறை போல் எனக்கு உண்டு. எடுத்துக்காட்டாக என்னுயிர் நண்பர்களில் ஒருவரான கண்ணதாசனை உங்கள் முன்னால் நிறுத்துகிறேன்.

அவரது சுய வலிமைக்கும், சுய முயற்சிக்கும் இரண்டையும் பயன்படுத்தி அவர் பெற்ற வெற்றிக்கும் சான்றாக இதோ ஓர் ஆதாரப்பூர்வமான தகவல். இத் தகவல் 16-10-2005 தேதியிட்ட குங்குமம் வார இதழில் வெளிவந்துள்ளது. கவிஞரின் அண்ணன் ஏ.எல் சீனிவாசனின மகனும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.எல்.எஸ்.கண்ணப்பனின் மனைவி ஜெயந்தி கண்ணப்பனிடமிருந்து கிடைத்த கண்ணதாசனின கடிதம் அது. அவர், தன் அண்ணனுக்கு எழுதிய கடிதம் அவர் விடுதியில் தங்கி, முத்தையா என்ற இயற்பெயருடன் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது, விடுதியில் தன உபயோகத்திற்குத் தேவைப்படும் பொருள்கள் குறித்து அண்ணனுக்குப் பட்டியலிட்டு அக்கடிதம் எழுதி யுள்ளார்.

என நண்பர் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது தலையணை உறையை ‘தலகாணி உரை” என்று எழுதியிருப்பது தான் நாம் கவனிக்கத்தக்கது. ஆறாம் வகுப்பு படிக்கும் போது கண்ணதாசன், முத்தையாவாக இருந்து தலையணை உறை என்பதைத் தலகாணி உரை என்று தவறாக எழுதியதற்காகத் தமிழ்த்தாய் அவரைச் சபித்துச் சாபமிட்டுவிட்டாளா? இல்லை! இல்லவே இல்லை!

தமிழ்த்தாய் அவரைத் தாவி அணைத்து வாழ்த்தி மகிழ்ந்தாள்! முயற்சிப்படிகளில் ஏறுக என்று கூறி உயர்த்திவிட்டாள்.

அதன்படி கண்ணதாசன் சுய வலிமையைப் பயன்படுத்தினார். அந்த வலிமையைப் பெருக்கும் முயற்சியில் இடைவிடாது ஈடுபட்டார்- பாடுபட்டார்-தமிழாசிரியராகப் பன்மொழிப் புலவர் அப்பாதுரை யாரை ஆக்கிக் கொண்டு- முயற்சியால் முன்னேறினார்- முறையாகத் தமிழ் கற்றார்- சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் திரைக்கூடத்து ஒத்திகை அரங்கில் அவரை எனக்கு கவி.காமு.ஷெரீப், கவிஞர் மருதகாசி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தபோது அவருடன் இருந்த அந்தத் திரைக்கூடத்து மேலாளர் சுலைமான் என்பார் என்னிடம் கண்ணதாசனைக் காட்டி ‘சார்! இவர் இங்கே ‘சண்டமாருதம்” பத்திரிகை ஆசிரியர் ‘எழுந்தால் காள மேகந்தான்!” என்பதுபோல ‘இவர் எழுந்தால் சண்டமாருதம் தான்” என்று புகழ்ந்ததை இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது.

தொடர்ந்து பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் ‘கவிஞர்” எனப் புகழ் மகுடம் சூட்டினேன். அதன் தொடர்ச்சியாகப் புவியில் தமிழர் வாழும் இடமெல்லாம் கவியரசராகக் கோலோச்சத் தொடங்கினார்.

காலத்தின கோலம் மாற்று முகாமில் நின்று அவர் என்னைத் திட்டித் தீர்த்த போதும் ‘உன் தித்திக்கும் தமிழுக்காக அதைப் பொறுத்துக் கொள்கிறேனய்யா!” என்றே சொல்லியிருக்கிறேன்.

திரைப்பாடல்களா? வார்த்தைகள் தாங்களாகவே வடிவமைத்துக் கொண்டு அவர் இருந்த திக்கு நோக்கித் தெண்டனிட்டன!

கற்கண்டுகளென வந்து விழும் சொற்களோ அவரைக் கரங்கூப்பித் தொழுது அவர் கட்டளைக்கேற்பக் கவிதைகளாக உருப்பெற்றன!

‘தலையணை உறை” என்பதை ”தலகாணி உரை” என்று எழுதியவர் தமிழுலகின் உச்சாணியில் ஒளியுமிழ்பவரானதற்கு சுயவலிமையும், சுய முயற்சியும்தான் தலையாய காரணம் என்பதை உணர்ந்து கொண்டால் இன்றைய இளைஞர்கள், அந்தக் காரணத்தைக் கருத்தில் பதிய வைத்துப் பணியாற்றினால் கோபுரத்துக் கலசங்களாகலாமன்றோ! அத்துடன் கொள்கை உறுதியும் இணைந்தால் கலசங்கள கலங்கரை விளக்கங்களாகவும் மாறுவது உறுதியன்றோ?

எனவே என வேண்டுகோள்-

இளைஞர்கள் மாணவர்கள்
எழுஞாயிறுகளாக ஒளிவிட
வரலாறு படியுங்கள்-
வரலாற்று நாயகர்களை வணங்குங்கள்-
வீரர்களை அறிந்து கொள்ளுங்கள்-
விவேகிகளைப் புரிந்து கொள்ளுங்கள்-
விஞ்ஞானிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்-
விஞ்ஞானப் புதுமைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்-
தியாகிகளைப் பாராட்டுங்கள்- நமது
திருநாட்டைப் பாதுகாத்திடுங்கள்!
வாழ்க்கைப் பயணத்தைப் பகுத்தறிவு
வழியில் மேற்கொள்ளுங்கள்!
உழைத்து உயர்ந்தவர்களைப் புத்தகமாகப் படியுங்கள்!
முயற்சியினால் முன்னேறியவர்களை வழிகாட்டிகளாக ஏற்றிடுங்கள்.

நேரு மறைந்தபோது எழுதிய கண்ணதாசனின் கண்ணீர் அஞ்சலி – இளையராஜாவின் குரலில்

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்

சீரிய நெற்றி எங்கே
சிவந்தநல் இதழ்கள் எங்கே
கூரிய விழிகள் எங்கே
குறுநகை போன தெங்கே
நேரிய பார்வை எங்கே
நிமிர்ந்தநன் நடைதான் எங்கே?
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்த திங்கே!

அம்மம்மா என்ன சொல்வேன்
அண்ணலைத் தீயிலிட்டார்
அன்னையைத் தீயிலிட்டார்
பிள்ளையைத் தீயிலிட்டார்
தீயவை நினையா நெஞ்சைத்
தீயிலே எரியவிட்டார்
தீயசொல் சொல்லா வாயைத்
தீயிலே கருகவிட்டார்!

வேறு

பச்சைக் குழந்தை
பாலுக்குத் தவித்திருக்க
பெற்றவளை அந்தப்
பெருமான் அழைத்துவிட்டான்
வானத்தில் வல்லூறு
வட்டமிடும் வேளையிலே
சேய்கிளியைக் கலங்கவிட்டுத்
தாய்க்கிளியைக் கொன்றுவிட்டான்

சாவே உனக்குகொருநாள்
சாவு வந்து சேராதோ!
சஞ்சலமே நீயுமொரு
சஞ்சலத்தைக் காணாயோ!
தீயே உனக்கொருநாள்
தீமூட்டிப் பாரோமோ!

தெய்வமே உன்னையும் நாம்
தேம்பி அழ வையோமோ!
யாரிடத்துப் போயுரைப்போம்!
யார்மொழியில் அமைதிகொள்வோம்?
யார்துணையில் வாழ்ந்திருப்போம்?
யார்நிழலில் குடியிருப்போம்?

வேரோடு மரம்பறித்த
வேதனே எம்மையும் நீ
ஊரோடு கொண்டுசென்றால்
உயிர்வாதை எமகில்லையே…
நீரோடும் கண்களுக்கு

நிம்மதியை யார்தருவார்?
நேருஇல்லா பாரதத்தை
நினைவில் யார் வைத்திருப்பார்?
ஐயையோ! காலமே!
ஆண்டவனே! எங்கள்துயர்
ஆறாதே ஆறாதே
அழுதாலும் தீராதே!

கைகொடுத்த நாயகனைக்
கண்மூட வைத்தாயே
கண்கொடுத்த காவலனைக்
கண்மூட வைத்தாயே
கண்டதெல்லாம் உண்மையா
கேட்டதெல்லாம் நிஜம்தானா
கனவா கதையா
கற்பனையா அம்மம்மா…

நேருவா மறைந்தார்; இல்லை!
நேர்மைக்குச் சாவே இல்லை!
அழிவில்லை முடிவுமில்லை
அன்புக்கு மரணம் இல்லை!
இருக்கின்றார் நேரு
இங்கேதான் இங்கேதான்
எம்முயிரில், இரத்தத்தில்,
இதயத்தில், நரம்புகளில்,
கண்ணில், செவியில்,
கைத்தலத்தில் இருக்கின்றார்
எங்கள் தலைவர்
எமைவிட்டுச் செல்வதில்லை!
என்றும் அவர் பெயரை
எம்முடணே வைத்திருப்போம்

அம்மா…அம்மா….அம்மா…..!

பண்புடன் குழுமத்தில் செல்வன் என்ற அன்பர் கேட்கும் கேள்வி இது :

கவியரசே…!   ”காதலெனும் பரிசு தந்தேன் கட்டிலின் மேலே” என்று தலைவனையும் “அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே” என்று தலைவியையும் பாடவைத்திருக்கிறாயே? காதல் என்பது தலைவன் தலைவிக்கு அளிக்கும் கருணையா? இது நியாயமா?

60-களில் உன்னிடம் இருந்த இந்த மனபோக்கு “ஆதிக்கநாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே?” என்று 80களிலும் தொடர்ந்திருக்கிறதே? இது நியாயமா கவியரசே?

செல்வன்

தொடர்புடைய சுட்டி :

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் குரலில் இந்த பாடலின் சூழல்

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே !

Posted by: Abdul Qaiyum | September 12, 2009

இரங்கல் கவிதை

vaali

கண்ணதாசனே ! – என்
அன்பு நேசனே !

நீ
தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !

சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !

உனக்கு
மூன்று தாரமிருப்பினும் – உன்
மூலா தாரம் முத்தமிழே !

திரைப் பாடல்கள்
உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !

படக் கொட்டகைகள்
உன்னால்
பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !
நீ
ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !

கண்ணனின் கைநழுவி
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !
 
அயல் நாட்டில்
உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !

பதினெட்டுச்
சித்தர்களுக்கும்
நீ
ஒருவனே
உடம்பாக இருந்தாய் !
நீ
பட்டணத்தில் வாழ்ந்த
பட்டினத்தார் !

கோடம்பாக்கத்தில்
கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !
நீ
தந்தையாக இருந்தும்
தாய் போல்
தாலாட்டுக்களைப் பாடியவன் !
 
இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும்
உன்
படப் பாடல்கள்
பதிவாகி யிருக்கின்றன !
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..

எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.

அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !

- கவிஞர் வாலி
(கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை}

Posted by: Abdul Qaiyum | September 4, 2009

திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில், கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட ‘நான் மனமாக இருந்து நினைப்பேன்… நீ வாக்காக இருந்து பேசு’ என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. ஆனால் அதையே நான் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது.

Posted by: Abdul Qaiyum | September 3, 2009

கடைசிப் பாடல்

கண்ணதாசன்

அமெரிக்காவுக்குச் சென்ற கவிஞர் கண்ணதாசன் தமிழ்ப் பிள்ளைகள் தமிழில் பேசவில்லை என்று ஆதங்கத்துடன் ஒரு பாட லை எழுதினார்:

“மனிதனில் ஒன்று பட்டு சேர்ந்திருப்பீர்;
இங்கு மழலைகள் தமிழ் பேசச் செய்து வைப்பீர்;
தமக்கெனக் கொண்டு வந்ததேதுமில்லை;
பெற்ற தமிழையும் விட்டு விட்டால் வாழ்க் கையில்லை”

என்றார் கவிஞர் கண்ணதான். இதுதான் அவர் எழுதிய கடைசிப் பாடல்.

தொடர்புடைய சுட்டி : தமிழ் சினிமாவும் பாடல்களும்

Posted by: Abdul Qaiyum | September 2, 2009

சுய விமர்சனம்

கண்ணதாசன்

“நான் யார் யாருக்கு உதவி செய்தேனோ அவர்களை மறந்து விட்டேன். யார் யார் என் வாழ்வைச் சீரழித்தார்களோ அவர்களே என் நினைவில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓய்வாக உட்காரும் போதெல்லாம் அவர்களே என் நினைவிற்கு வருகிறார்கள். என்னைப் பிறரும் கெடுத்து, நானும் கெடுத்துக் கொண்ட பின்பு, மிச்சமிருக்கும் கண்ணதாசனையே இப்போது சந்திக்கிறீர்கள்.”

- கண்ணதாசன்

Posted by: Abdul Qaiyum | September 2, 2009

படிக்காத மேதை

கண்ணதாசன்

பட்டப்படிப்பு படிக்கத்தான் நினைத்திருந்தேன்
கொட்டும் மொழி மழையிற் குளிக்கத்தான் நினைத்திருந்தேன்
ஆனால் எட்டாம் வகுப்பை எட்டத்தான் என் பெற்றோர்
இட்டார்;பின் ஏழ்மையிலே என்னை உலகில் விட்டார்
கல்வியிலான் வாழ்வு கரைகாணாத் தோணியெனக்
கலங்கினேன்; கற்றோரைக் கண்டு கரையில் நின்றேன்.

- கண்ணதாசன்

Posted by: Abdul Qaiyum | September 2, 2009

நினைவாஞ்சலி

Karunanidhi

என் இனிய நண்பா !
இளவேனிற் கவிதைகளால்
இதயசுகம் தந்தவனே! உன்
இதயத்துடிப்பை ஏன் நிறுத்திக் கொண்டாய்!

தென்றலாக வீசியவன் நீ ! – என் நெஞ்சில்
தீயாகச் சுட்டவனும் நீ ! அப்போதும்
அன்றிலாக நம் நட்பு நிகழ்ந்ததேயன்றி
அணைந்த தீபமாக ஆனதே இல்லை; நண்பா!

கண்ணதாசா! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!
கவிதை மலர்த் தோட்டம் நீ ! – உன்னைக்
காலமெனும் பூகம்பம் தகர்த்துத்
தரைமட்டம் ஆக்கிவிட்டதே !

கைநீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ !
கல்லறைப் பெண்ணின் மடியிலும்
அப்படித்தான் தாவி விட்டாயோ
அமைதிப்பால் அருந்தித் தூங்கி விட !
இயக்க இசைபாடிக்களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முன்னை
தாக்குதல் கணை எத்தனைதான் நீ
தொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என்நெஞ்சே உன் அன்னை !
திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால்
சுவைப்பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை;

தித்திக்கும் கவித்தமிழா! பிரிவின்
மத்தியிலே ஏன் விட்டுச் சென்றாய் ?
அடடா! இந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்!

ஆயிரங்காலத்துப் பயிர் – நம்
தோழமையென ஆயிரங்கோடி கனவு கண்டோம்!
அறுவடைக்கு யாரோ வந்தார் !
உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்

நிலையில்லா மனம் உனக்கு ! – ஆனால்
நிலைபெற்ற புகழ் உனக்கு !

இந்த அதிசயத்தை விளைவிக்க உன்பால்
இனியதமிழ் அன்னை துணை நின்றாள் !

என் நண்பா !

இனிய தோழா !

எத்தனையோ தாலாட்டுப்பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள் !
எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு
இயற்கைத்தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா ?

எனை மறந்தாய்! எமை மறந்தாய்! உனை
மறக்க முடியாமல் உள்ளமெல்லாம் நிறைந்தாய் !

- கலைஞர் மு. கருணாநிதி

Older Posts »

Categories