கண்ணதாசனும் குணங்குடி மஸ்தானும்

இன்று குமரி அபுபக்கர் பாடிய குணங்குடி மஸ்தானின் பாடலைக் கேட்டபோது சில எண்ணங்கள் என் மனதில் ஓடின. அதை உங்களுக்கு பகிர்கிறேன்.

நம் வாழ்க்கை என்பது ஒரு பொம்மலாட்டம் போன்றது. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமெனில் “IT’S JUST A PUPPET SHOW” .

கண்ணுக்குத் தெரியாத ஒரு மெல்லிய கயிறால் நாம் இயங்குகிறோம். அதை ஆட்டுவிப்பவன் மேலிருந்து இயக்குகிறான். மெல்லிய கயிறால் ஆட்டுவிக்கும் அந்த சக்தியை அவரவர் அவரவர் இஷ்டத்திற்கு வெவ்வேறு பெயரைக் கொண்டு அழைக்கின்றனர்.

சிலர் அல்லாஹ் என்கின்றனர்.
சிலர் கண்ணா என்று விளிக்கின்றனர்
இன்னும் சிலர் நந்தலாலா என்று அழைக்கின்றனர்.

“உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா!!” என்று பாடலைத் தொடங்கும் கவிஞர் கண்ணதாசன்

‘கால் கொண்டு ஆடும் பிள்ளை
நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா
நீ சொல்லு நந்தலாலா”

என குணங்குடியாரின் பொம்மலாட்ட தத்துவத்தை வருணிக்கிறார்

அவர் சொல்ல வரும் கருத்தை ஒரே வரியில் நான் சொல்ல வேண்டுமென்றால் “LIFE IS LIKE A PUPPET SHOW” என்கிறார். அவ்வளவுதான். SIMPLE DEFINITION.

இன்னொரு பாடலில்

“ஆட்டுவித்தால் யாரொருவர்
ஆடாதாரே கண்ணா”

என்ற அதே கருத்தை வேறு பாணியில் சொல்கிறார்.

இந்த PUPPET SHOW தத்துவம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்று ஆராய்ந்துப் பார்த்தால் அது குணங்குடி மஸ்தான் பாடலில் நமக்கு காணக் கிடைக்கிறது.

//ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி//

என்று கண்ணதாசன் எழுதிய மற்றொரு பாடலில்

“ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை – இதில்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை”

என்ற தத்துவத்தை முன் வைக்கிறார். “உன் கையில் ஒன்றும் இல்லை. உன்னை ஆட்டுவிப்பவன் கையில்தான் எல்லாமே உள்ளது” என்பது இதன் உள்ளர்த்தம்.

குணங்குடி மஸ்தான் என்பவர் ஒரு மாபெரும் சித்தர், மிகப்பெரும் ஞானி என்பதை நாம் அறிவோம். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். குமரி அபுபக்கரின் இனிமையான குரலில் இசைக்கும் இந்த தத்துவப் பாடலை இதோடு இணைத்திருக்கிறேன்

//சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
சூட்சுமக் கயிற்றினைப் பாரடா!
அதிசூட்சும கயிற்றினைப் பாரடா !!

நேத்திரம் இரண்டிலும் நேரில் இலங்கிய
நீடொளி போன்றது தேட அரிதாகி
காத்திரம் உள்ளது யாவும் பொதிந்தது
கையிலும் காலிலும் எட்டப்படாதது

சாத்திர வேதம் சதகோடி கற்றாலும்
சமயநெறிகளினால் ஆச்சாரம் பெற்றாலும்
பாத்திரம் ஏந்தி புறத்தில் அலைந்தாலும்
பாவனையால் உடல் உள்ளம் உலைந்தாலும்
மாத்திரை நேரம் எமன் வரும் அப்போது
மற்றொன்றும் உதவாது உதவாது

சூத்திரமாகிய தோணி கவிழும் முன்
சுக்கானை நேர்படுத்துஇக்கணமே சொன்னேன்

உற்ற உறவின்முறையார் சூழ்ந்திருந்தென்ன
ஊருடன் சனங்களெல்லாம் பணிந்து இருந்தென்ன
பெற்றோரும் பெண்டீரும் பிள்ளை இருந்தென்ன
பேணும் பெருஞ்செல்வம் ஆணவத்தால் என்ன

கத்தன் பிரிந்திடின் செத்த சவமாச்சு
காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு
எத்தனைபேர் நின்று கூக்குரல் இட்டாலும்
எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ — இந்த

மாயாப்பிறவி வலையை அடைத்திட
மாறாத் தியானமனத்தினில் இணைத்திட
காயாபுரிக் கோட்டை கைக்குள் அகப்பட
காணும் மணிச்சுடர் தானே விளங்கிட

ஆயும் அறிவுடன் யோகத்தினால் எழும்
ஆனந்தத் தேனை உண்டு அன்புடனே தொழும்
தாயாய் உலகத்தை ஈன்ற குணங்குடி
தற்பரனைக் கண்டு உவப்புடனே சென்று

சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
சூட்சுமக் கயிற்றினை பாரடா
அதிசூட்சும கயிற்றினை பாரடா !!//

குணங்குடியாரின் இப்பாடலில் இரண்டு விதமான தத்துவத்தை நாம் காண முடிகிறது. ஒன்று வாழ்க்கை என்பது பொம்மலாட்டம் என்ற கருத்து, மற்றொன்று வாழ்க்கை என்பது ஒரு தோணியைப் போன்றது என்ற கருத்து.

//சூத்திரமாகிய தோணி கவிழும் முன்
சுக்கானை நேர்படுத்துஇக்கணமே சொன்னேன்//

என்ற மேற்கண்ட குணங்குடியாரின் கருத்தை கலைஞர் கருணாநிதி அவர்கள்

//வாழ்க்கையெனும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்கவொண்ணா வேதம்//

என்று கூறுகிறார். மேலும் தொடர்கிறார்

//துடுப்புகள் இல்லா படகு
அலைகள் அழைக்கின்ற திசையெலாம் போகும்
தீமையைத் தடுப்பவர் இல்லா வாழ்வும்
அந்த படகின் நிலை போலே ஆகும்//

இப்பாடல் பூம்புகார் படத்தில் கவுந்தியடிகள் பாடுவதைப் போன்று காட்சி அமைந்திருக்கும்.

//உற்ற உறவின்முறையார் சூழ்ந்திருந்தென்ன
ஊருடன் சனங்களெல்லாம் பணிந்து இருந்தென்ன
பெற்றோரும் பெண்டீரும் பிள்ளை இருந்தென்ன
பேணும் பெருஞ்செல்வம் ஆணவத்தால் என்ன//

என்ற குணங்குடியாரின் கருத்துக்களைத்தான் இலகுவான சொற்களால் தோரணம் அமைத்திருப்பார் கண்ணதாசன்

ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன…?

//கத்தன் பிரிந்திடின் செத்த சவமாச்சு
காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு
எத்தனைபேர் நின்று கூக்குரல் இட்டாலும்
எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ//

என்ற குணங்குடியாரின் தத்துவக் கருத்துக்களை ‘போனால் போகட்டும் போடா’ என்ற பாடலில் இணைத்திருப்பார்.

//இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா…//

போனால் திரும்பி வராத கட்டை என்ற கருத்தைத்தான் கண்ணதாசன் அவரது பாணியில் சொல்லியிருப்பார். இந்த கட்டை என்ற சொற்பதத்தை அவர்

//பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா//

என்ற பாடலிலும் பயன்படுத்தியிருப்பார்.

இப்போது மறுபடியும் குணங்குடியாரின் பொம்மலாட்ட தத்துவத்தை வைத்து ‘போனால் போகட்டும் போடா’ பாடலை எப்படி கண்ணதாசன் முடிக்கிறார் என்று பாருங்கள்

//நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
நாலும் தெரிந்த தலைவனடா – தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா…//

ஆக அந்த சூட்சமக் கயிற்றை இயக்குபவன் சூழ்ச்சிக்கார்ர்களுக்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரனாக விளங்கும் எல்லா வல்ல இறைவன்தான் என்ற சித்தர்களின் தத்துவத்தை இந்த சாதாரண சினிமா பாட்டின் மூலம் நமக்கு கண்ணதாசன் உணர்த்துகிறார்.

#அப்துல்கையூம்

பின்குறிப்பு :
சுக்கான் : தேவையான திசையில் கப்பல் திருப்ப உதவும் கருவி

கண்ணதாசனும் என் தமிழாசிரியரும்

 

கவிஞர் நாஞ்சில் ஷா

கவிஞர் நாஞ்சில் ஷா

வாழ்க்கையெனும் இரயில் பயணத்தில் நம்மோடு பயணிப்பவர்கள் பற்பலர். அற்ப நபர்களின் நினைவுகளை, சற்று நேரத்தில், சந்திப்பு தாண்டியதும் சத்தமின்றி இறக்கி வைத்து விடுகிறோம். சொற்ப நபர்களின் நினைவுகளை மாத்திரம் கர்ப்பக்கிரகத்து சிலைகளென பத்திரமாய் நெஞ்சினில் பதுக்கி வைத்து நித்தம் நித்தம் போற்றுகிறோம்.

கன்னித்தமிழ் பெருமையினை; கணக்கின்றி எனக்கு; காலங்கடந்து நிற்கும் வகையில்; கனிவாய் எடுத்துரைத்து; கவிதைக்குரிய யாப்பிலக்கணத்தை கற்றுக் கொடுத்த – காப்பியங்கள் வடித்த – கண்ணியத்திற்குரிய மறைந்த என் தமிழாசிரியர் நாஞ்சில் ஷாவை கண்டிப்பாய் என் மனதிலிருந்து களைய இயலாது.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயருக்கு முன் “நாஞ்சில்” என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொள்வது அழகுசேர் மரபு. நாஞ்சில் கி.மனோகரன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் சம்பத் நல்லதோர் உதாரணம். நாஞ்சில் மண் பெருமைகளை நெஞ்சத்தின் மஞ்சத்தில் நிரந்தரமாய்ச் சுமந்து போற்றிய வாஞ்சைமிகு ஆசான் என்னாசான்.

அடர்த்தியான மீசை, அன்பொழுகும் பேச்சு அருந்தமிழாய் இருந்தது அவர் விடும் மூச்சு. கனிவான அவரது கன்னித்தமிழ் அரவணைப்பில் நாங்கள் கட்டுண்டுக் கிடந்தோம். வாழ்க்கைப் பயணத்தில் அவரது அறிவுரைகள் மாணவர்களாகிய எங்களுக்கு குதிரைச் சக்தியாய் இயங்கி “கமான்”… கமான்”.. என்றது. கவியரங்கம் நடத்தி என்னை நடுவராக்கி அழகு பார்த்தவர் அவர்.

நேர் நேர் தேமா ; நிரை நேர் புளிமா,
நிரை நிரை கருவிளம், நேர் நிரை கூவிளம்
நேர் நேர் நிரை தேமாங்கனி,
நிரை நேர் நிரை புளிமாங்கனி
நிரை நிரை நிரை கருவிளங்கனி
நேர் நிரை நிரை கூவிளங்கனி

என யாப்பிலக்கணத்தை வாய்ப்பாடு போல் தினமும் ஒப்பிக்கவைத்து எங்கள் மனதில் படிய வைத்தவர். தவறாக உரைத்தால் முறைப்பார்; முகத்துக்கு நேரே கடிந்தும் கொள்வார்.

நான் படித்த அதே வண்டலூர் கிரஸெண்ட் பள்ளியில்தான் கண்ணதாசனின் அருமை புதல்வன் மறைந்த என் நண்பன் கலைவாணனும் படித்து வந்தான். ஒருமுறை எங்கள் பள்ளிக்கு கண்ணதாசனை அழைத்து வந்து அவர் முன்னிலையில் என்னைக் கவிதை பாட வைத்தார் என் தமிழாசான் நாஞ்சில் ஷா..

மாணவப் பருவத்தில் கவியரங்கத்தில் நடுவராக கட்டுரையாளர்

கவியரங்கத்தில் மாணவப் பருவத்தில் மீசை வரைந்துக் கொண்டு நான் (நடுவில்)

வெண்பாவுடன் தொடங்கி ‘அழுகை’ என்ற தலைப்பில் பண்-பா படித்தேன். மண்டபத்தில் யாரும் எழுதித் தரவில்லை. சிறுவனாய் இருந்த நானே இயற்றி, நானே வாசித்தேன் அந்த நவரச நாயகன் முன்னே.

விண்ணழுதால் மழையாகும்
—வளங்கொழிக்க வழியாகும்
பெண்ணழுதால் நகையாகும்
—பணம்கரைய வழியாகும்
பொன்னழுதால் நகையாகும்
—பொற்கொல்லர் பணியாகும்
மனமழுதால் கவியாகும்
—மலையழுதால் நதியாகும்

எனத் தொடங்கி இறுதியில் //தாயழுத கண்ணீரின் தாலாட்டே நாமாகும்// என்ற வரிகளுடன் அந்த தமிழ்க்கவிதை முற்றுபெறும்..

வாசித்து முடித்ததும் வையம் புகழ் கவிஞனின் வளைக்கரம் என்னை அணைத்தது. வாயாரப் புகழ்ந்தது. ‘வசிட்டரின் வாயால் பிரம்ம ரிஷி பட்டம்’ பெற்றதை வருணிக்க வார்த்தைகளே இல்லை.

“கண்ணதாசன்” என்ற இதழுக்கு கவியரசர் ஆசிரியராக களம் கண்ட காலக்கட்டமது. அதில் “ஐயம் அகற்று” என்ற தலைப்பில் ஒரு பகுதி. மிகுதியாய் வாசிக்கப்படும் பகுதி அது. வாசகர்களின் சந்தேகத்திற்கான பதிலை வஞ்சனையின்றி வாரி வாரி வழங்குவார் கவியரசர்.

1978-ஆம் ஆண்டு ஜனவரி மாத இதழில் கவிதைவரிகளால் ஒரு கேள்விக்கணையைத் தொடுத்திருந்தார் நாஞ்சில் ஷா. கண்ணதாசன் மாத்திரம் சளைத்தவரா என்ன..? பாட்டுக்கு எசப்பாட்டு அவருக்கு அதுபாட்டுக்கு வராதா..?

நாஞ்சில் ஷா கவிதையாக கேட்ட அக்கேள்விக்கு நறுக்கென்று கவிதையாகவே பதில் தந்தார் கவியரசர். அந்தக் கவிதை கவியரசரின் வரலாற்றுப் பக்கங்களில் ஒரு வாக்குமூலமாக அமைந்து விட்டது. சரித்திரச் சான்று பகரும் சரியான சுயவிளக்கம் அது.

மலை போன்ற தத்துவத்தை
—மலை வாழைப் பழமே யாக்கி
நிலையான தமிழ்த்தேன் பாகில்
—நியமமுடன் சேர்த்து நல்கும்
கலைஞானக் கவிதை வேந்தே!
—காப்பியங்கள் ஆர்த்து ஞாலத்
தலைமேலே அமரப் போகும்
—சாதனை தான் எப்போ தென்பீர்?

“கவிதைகள், பாடல்கள் புனைந்த நீங்கள் காப்பியங்கள் பல வடித்து புவித் தலைமை கொள்ளப் போவது எப்போது…?” என்ற கவிஞர் நாஞ்சில் ஷாவின் கேள்விக்கு கவியரசர் தந்த பதில் காலங்காலமாய் மனதில் நிற்கிறது.

நோகாத மனம் வேண்டும் காலம் வேண்டும்
—நோயில்லா உடல் வேண்டும் சூழல் வேண்டும்
ஆகாத தொடர்பெல்லாம் அறுதல் வேண்டும்
—அன்றாடச் செலவுக்குப் பணமும் வேண்டும்
சாகாத காப்பியங்கள் செய்வதென்றால்
—தமிழ் மட்டும் போதாதே! என்ன செய்ய?
வாகான தெய்வத்தை வரங் கேட்கின்றேன்
—வளமான உடல்வாழ்க்கை வழங்கு மாறே!

“காப்பியங்கள் புனைவது கம்ப சித்திரமல்ல. ஆனால் அதற்கு முதற்கண் அலைக்கழிக்காத மனம் வேண்டும்; போதிய கால அவகாசம் வேண்டும்; தகாத உறவுகளை நான் களைய வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக “துட்டு காசு மணி மணி” வேண்டும்” என்று பட்டென்று பயமின்றி கூறும் மனத்துணிச்சல் கவியரசர் ஒருவருக்குத்தான் இருந்தது.

இதே பாணியை பின்பற்றித்தான் பிறிதொருமுறை “தமிழ் திரைப்பட பாடல்கள் மெட்டுக்கு பாட்டா? , பாட்டுக்கு மெட்டா?” என்ற கேள்விக்கு “துட்டுக்கு பாட்டு ” என்று சட்டென்று விட்டடித்தார் கவிஞர் வாலி.

‘நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை தமிழ்க்கூறும் நல்லுலகத்திற்கு வழங்கியவர் கவிஞர் நாஞ்சில் ஷா. 1977- ஆம் ஆண்டு “மில்லத் பிரிண்டர்ஸ்” இந்நூலை அச்சிட்டு வெளியிட்டது. இந்நூலுக்கு அணிந்துரை வேண்டும் என்று அவர் கேட்டபோது தயக்கமின்றி தமிழ்க்கவிதை யாத்துத் தந்தார் கவியரசர். இதோ அந்தக் கவிதை

நாஞ்சில் ஷா காட்டுகின்ற
—நல்ல நபி நாயகத்தை
வாஞ்சையுடன் பார்த்தபின்னர்
—மற்றவற்றைக் கற்பதற்குக்
கடைகடையாய் ஏறிக்
—கால்வலிக்க நான் நடந்தேன்;
எத்தனையோ அற்புதங்கள்
—எத்தனையோ அதிசயங்கள்
அன்னை ஆமினா
—அளித்தமகன் வாழ்க்கையிலே!”

என்று பாடினார் கண்ணதாசன். “நபிகள் நாயகள் பிள்ளைத் தமிழ்” என்ற இக்கவிதை நூலை கண்ணுற்ற பின்னர் அவருக்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறையை மென்மேலும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.

“சீனம் சென்றேனும் ஞானம் தேடுக” என்ற நபிகளாரின் பொன்மொழிக்கேற்ப மேலும் ஞானம் தேடுதற்கு நூல்களை நாடி கடைகடையாக கால்வலிக்க ஏறி இறங்குகிறார் கவிஞர். இதைத்தான் ‘அறிவுத்தாகம்’ என்கிறார்கள். “ஆமினா பெற்ர அண்ணலாரின் வாழ்க்கையில்தான் எத்தனை அதிசயங்கள்! எத்தனை அற்புதங்கள்!” என அறிந்து வியக்கிறார், மனதில் உதித்த எண்ணங்களை அப்படியே கவிதையாக வடித்து இன்புறுகிறார்.

ஒரு காலத்தில் நாத்திகம் பேசிய அதே கண்ணதாசன்தான் பின்வரும் காலத்தில் “அர்த்தமுள்ள இந்து மதம்” என்ற நூலையும், “ஏசு காவியம்” என்ற நூலையும் எழுதினார். அதே கண்ணதாசன்தான் திருமறையின் தோற்றுவாய் எனப்படும் “அல் ஃபாத்திஹா” முதல் அத்தியாயத்துக்கு எளிய நடையில் இஸ்லாமிய அறிஞர்களின் உதவியுடன் மொழிபெயர்த்தார்.

சமய பாகுபாடு பாராது உள்ளதை உள்ளபடி மனம் திறந்து பாராட்டுவது கவியரசரின் இயல்பு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத பிள்ளை உள்ளம் கொண்ட வெள்ளை மனது சொல் வைத்து விளையாடும் அந்த சூத்திரதாரியுடையது!!!

பள்ளி மாணவர்களுடன் நாஞ்சில் ஷா (வலது கோடியில் உட்கார்ந்திருப்பவர்)

வகுப்புத்தோழர்களுடன் நாஞ்சில் ஷாவுடன் நான் (கடைசி வரிசையில் வலதுகோடியில்)

அப்துல் கையூம்
பஹ்ரைன்

கண்ணதாசன் காட்சிபடுத்திய ILLUSION

“உள்ளம் என்பது ஆமை – அதில்
உண்மை என்பது ஊமை”

Kஅன்ன

இன்னிசையுடன் கூடிய கண்ணதாசனின் இப்பாடல்வரிகளை,  இரவின் மடியில், இரண்டு கண்களையும் இறுக்கமாக மூடியபடி   இலயித்து  ரசிக்கும்போதெல்லாம், அதில் வரும் ஒவ்வொரு வரிகளுக்கும், காட்சிகள்  என்  மனக்கணினி திரை முன், தனித்தனியே Windows தானகவே திறக்கும்.

இப்பாடலின் அத்தனை வார்த்தைகளுக்கும் அருஞ்சொற்பொருள், அத்தனை வரிகளுக்கும் பதவுரை; பொருளுரை; விளக்கவுரை எழுத வேண்டுமெனில் எனக்கு நேரமும் போதாது, அதை வாசிக்க உங்களுக்கு பொறுமையும் கிடையாது.

அதில் காணப்படும் இரண்டே இரண்டு வரிகளுக்கு மட்டும் சிறிய விளக்கத்தை தர விழைகிறேன். (சிறிய விளக்கமே இம்புட்டா என்றெல்லாம் கேட்கப்படாது. )

“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
சிலை என்றால் வெறும் சிலை தான்”

இதுதான் இப்பதிவுக்காக விளக்கம் கூற முற்பட நான் எடுத்துக் கொண்ட  இருவரிகள்.

வெறும் எட்டாம் வகுப்பு வரை படித்த கவிஞர் கண்ணதாசன் எப்படி திருமூலர் கருத்துக்கள் முதல் ஷேக்ஸ்பியர், ஷெல்லி கருத்துக்கள் வரை  இரண்டிரண்டு வரிகளில், உயிரைக் குடிக்கும் வீரியம் கொண்ட சயனைடு வேதிப்பொருளை சிறிய குப்பிக்குள் அடைத்து வைப்பதுபோல், வீரியமிக்க கருத்துக்களை Auto Compress செய்து எப்படி Word Format-ல் அடக்கி வைத்தார் என்பது மில்லியன் தீனார் கேள்வி (ஏன்.?. டாலரில் மட்டும்தான் கணக்கு சொல்ல வேண்டுமா என்ன?)

இந்தக் கருத்தை கண்ணதாசன் திருமூலரிடமிருந்து காப்பிரைட் இன்றி “அலேக்காக அபேஸ்” பண்ணியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன் அல்லது Great Minds think Alike” என்ற கோட்பாட்டின்படியும்  இருக்கக்கூடும். திருமூலர் சொன்ன மூலக்கருத்தை Enlarge செய்வதற்கு ஒரு குட்டிக்கதை இங்கு தேவைப்படுகிறது.

சுரேஷும்,  ரமேஷூம் ஒரு கலைப்பொருள் கண்காட்சிக்கு செல்கிறார்கள். அங்கு பிரமாண்டமான அளவில் தேக்கு மரத்தாலான ராட்சத யானை ஒன்று செதுக்கப்பட்டு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

“வாவ்..! சூப்பர்.. என்னமா ‘ டால்’ அடிக்குது பாத்தியா இந்த தேக்கு மரம்” என்கிறான் ரமேஷ்.

“ஓ மை காட்! அட்டகாசம்..! எவ்வளவு நேர்த்தியாக செய்திருக்கிறார்கள் இந்த யானையை?. அஜீத் படம் மாதிரி அமர்க்களமாக இருக்கிறது” என்கிறான் சுரேஷ்.

காணும் காட்சி ஒன்றே. காண்பவர்களின் மனநிலை வெவ்வேறாக இருக்கிறது

இதைத்தான் திருமூலர் சொல்கிறார்

“மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை” என்று.

கண்ணதாசன் எழுதிய மற்றொரு பாடலும் கிட்டத்தட்ட இதே உட்பொருளை  கருவாகக் கொண்டதுதான் அண்ணன் தம்பிகளான 2G [அதாவது சிவாஜியும், பாலாஜியும்]  பெண்பார்க்கச் செல்கிறார்கள். ஒருவனுடைய கண்களுக்கு அப்பெண் பொன்னாகத் தெரிகிறாள். இன்னொருவன் அவள் முகத்தைக் காண்கிறான் . அது அவனுக்கு முகமாகத் தெரியவில்லை; பூவாகத் தெரிகிறது. இது என்ன உடான்ஸ் என்று கேட்கக்கூடாது. இதற்குப் பெயர்தான் Concentration.

//பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?//

இதுதான் அந்த அர்த்தம் பொதிந்த அட்டகாச வரிகள்

“கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!” என்ற பழமொழியை நாம் அடிக்கடி கையாள்கிறோம். அதன் உண்மையான உட்பொருள் வேறு. நாம் பயன்படுத்தும் சூழ்நிலை வேறு.

“கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்”

என்ற சொல்வழக்குத்தான் நாளடைவில் [GUN என்ற உயிர்கொல்லி ஆயுத எழுத்துக்களை அகற்றிவிட்டு], நாயகனை நாய் ஆக்கி விட்டது..

கோயிலுக்குச் செல்லும் ஒருவன் கல்லால் ஆன நாயகனை (கடவுளை) வெறும் கல் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் அது வெறும் கல்தான். அதேசமயம் அதனை கல் என்ற எண்ணத்தை அகற்றிவிட்டு கடவுளாகப் பார்த்தால் அது கடவுள்தான் என்று பொருள். இதைத்தான் ILLUSIONS என்று மேஜிக் செய்பவர்கள் கூறுகிறார்கள்.   நான் பள்ளியில் படிக்கையில் ஒரு மேஜிக் வித்தை செய்பவர்  எவர்சில்வர் டம்ளரில் கரண்டியால் கிண்கிணி என்று அடித்து சப்தம் உண்டாக்கி விட்டு அந்த     அதிர்வலை அடங்குவதற்குமுன் என் காதில் வைத்து “ரகுபதி ராகவ ராஜாராம்” என்ற பாடல் உன் காதில் கேட்கிறதா என்றார். என்ன ஆச்சரியம்? ஆம் கேட்டது.!!!

இதைத்தான் கண்ணதாசன் தனக்கே உரிய பாணியில் பாமரனும் புரியும் வண்ணம்

“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
சிலை என்றால் வெறும் சிலை தான்”

என்று பாடினான்.

“Concentration is the root of all the higher abilities in man” என்கிறார் மறைந்த உலகப் புகழ்ப்பெற்ற தற்காப்புக்கலை வீரர் புரூஸ்லீ.

“The secret of concentration is to shut down the other windows.”    என்கிறார் இன்னொரு யோகி

“மனதை ஒரு முகப்படுத்த கற்றுக் கொள்பவன் மகான் ஆவான்” என்கிறார் சுவாமி விவேகானந்தர் .

ஐவேளை தினந்தோறும் தொழுகும்  ஒரு முஸ்லீமுக்கு தொழுகையை விட மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி வேறு எதுவும் இருக்க முடியாது என்பது என் தாழ்மையான எண்ணம்.

வில்வித்தையில் நிபுணத்துவம் பெற்ற அர்ச்சுனன் பறவையை குறி பார்த்தபோது, அவனுக்கு அந்த பறவை அமர்ந்திருந்த மரமோ, மரத்தின் இலைகளோ, அல்லது அதற்கு பின்னால் தென்பட்ட வானமோ, அதனை சுற்றியிருந்த காட்சிகள் எதுவுமே அவன் கண்ணில் படவில்லை, ஏன் அந்த பறவைகூட அவன் கண்ணுக்கு முழுமையாகத் தெரியவில்லை, அவன் கண்ணுக்கு தென்பட்டது அப்பறவையின் கழுத்து மட்டுமே.

சீடன் ஒருவன் தன் குருவிடம் சென்று ஒரு கேள்வி கேட்கின்றான்.

“சுவாமி! நீங்கள் எங்கும் பிரம்மம் உள்ளது. அதைவிடுத்து வேறெதுவும் இங்கு இல்லை என்று உறுதியாக சொல்கின்றீர்கள், ஆனால் என் கண்களுக்கோ உலகம்தான் தெரிகின்றதே தவிர பிரம்மம் தெரியவில்லையே. ஏன் சுவாமி?”  எனக் கேட்கின்றான்
.
குருஜீ ஒரு மெல்லிய புன்னகையோடு பதில் கூறுகிறார்.

“ஒருவன் நகை வாங்க பொற்கொல்லர் இல்லத்திற்குச் செல்கிறான். அவரது அறையில் அவர் உருவாக்கிய வளையல், காப்பு, மோதிரம், தோடு கம்மல், பிள்ளையார் உருவம், போன்ற ஆபரணங்கள்   செய்யப்பட்டு அழகாக காட்சி தருகின்றன. தங்கமும், அதன் தரமும், அதன் எடையும் மட்டுமே அந்த ஆசாரிக்கு முக்கியம் அதேபோன்று போல பிரம்மத்தைதவிர வேறு எதுவும் எனக்கு முக்கியம் இல்லை.    நம்மிருவருக்குமே   காட்சி ஒன்றுதான், ஆனால் பார்க்கும் பார்வைதான் வெவ்வேறு” என்று அவனுக்கு புரிய வைத்தார்.

குருஜி முதல் புரூஸ்லீ வரை அத்தனைப்பேருடைய கருத்துக்களையும் கண்ணதாசன்

“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
சிலையென்றால் வெறும் சிலைதான்”

என இரண்டே வரிகளில் ஒரு மேஜிக்காரர் வரவழைக்கும் ILLUSION    போன்று  காட்சிகளை கொண்டுவந்து நமக்கு எளிதில் புரிய வைத்தார்.

That Is Knnadasan.

#அப்துல்கையூம்

நடிகர் திலகமும் கவிஞர் திலகமும்

ssssss

கண்ணதாசன் நினைவுகள் – பாகம் 2

e0ae95e0aea3e0af8de0aea3e0aea4e0aebee0ae9ae0aea9e0af8d-e0ae95e0af81e0ae9fe0af81e0aeaee0af8de0aeaae0aeaee0af8d

எங்களுடன் ஒன்றாகத் தங்கி படித்துக் கொண்டிருந்த கவிஞர் கண்ணதாசனின் செல்வப் புதல்வன் கலைவாணனுக்கு ஏனோ இந்த ஹாஸ்டல் வாழ்க்கை அறவே பிடிக்கவில்லை. இதனால் படிப்பிலும் அவனால் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை.

 

காரணம், சுதந்திரப் பறவையாக தன் வீட்டில் சுற்றித் திரிந்து வாழ்க்கையை தன் குடும்பத்தாருடனும், உடன்பிறந்தோருடனும் ‘ஜாலியாக’ அனுபவித்து வந்த அவன் இந்த ஹாஸ்டல் வாழ்க்கையை சிறைவாழ்க்கையாக எண்ணி கலக்குமுற்றான்.

 

ஒருநாள் காலை வேளையில், ஏற்கனவே அவன் திட்டமிட்டிருந்தபடி சுவரேறிக் குதித்து பள்ளி வளாகத்திலிருந்து வெளியே ஓடிவிட்டான். “தோள் கொடுப்பான் தோழன்” என்பார்கள். அதுபோல முதுகைக் கொடுத்து அதன் மீது ஏறி அவனை தப்பிக்க துணை புரிந்தவன் நானல்ல; என் இன்னொரு நண்பன்.

 

அச்சமயத்தில் அண்ணா உயிரியல் பூங்காவெல்லாம் வண்டலூரில் கிடையாது. ஓட்டேரி நாற்சந்தியில் ஒரே ஒரு கீற்றுக் கொட்டகை டீக்கடை மாத்திரம் இருக்கும். தாம்பரம் செல்வதற்கு ஏகப்பட்ட மண் லாரிகள் அவ்வழியே போய்க்கொண்டிருக்கும். அதில் ஏறி எப்படியோ வீட்டுக்குச் சென்றுவிட்டான் கலைவாணன்.

 

அன்று இந்த சம்பவம் எங்களுக்குள் பரபரப்பாக பேசப்பட்டது. மறுபடியும் எப்படியும் கலைவாணனை அவனது பெற்றோர்கள் அழைத்துக் கொண்டு வந்து விட்டுவிடுவார்கள் என்று எங்களுக்கு நன்றாகவேத் தெரியும். பள்ளி முதல்வர் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறாரோ என்று பயந்துக் கொண்டிருந்தோம்.

 

அப்போது எங்கள் பள்ளியின் முதல்வராக இருந்தவர் இறையருட்கவிமணி என்று போற்றப்படும் பேராசிரியர் கா.அப்துல் கபூர்.

principal

கா.அப்துல் கபூர்

“செந்தமிழுக்கு ஒரு சேதுப்பிள்ளை” என்று கூறுவதைப்போன்று “அழகுத்தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என்று எங்கள் பள்ளி முதல்வருக்கு புகழ்மாலைச் சூடுவார்கள் தமிழறிந்த சான்றோர்கள்.

 

எதிர்பார்த்தபடியே கலைவாணனின் குடும்பத்தார் மீண்டும் அவனை அழைத்து வந்து பள்ளியில் சேர்த்துவிட்டு போனார்கள். “போன மச்சான் திரும்பி வந்தான்” என்று பாட்டுப்பாடி நாங்கள் குதூகலித்தோம்.

 

கலைவாணனை அழைத்து எங்கள் பள்ளி முதல்வர் அவன் ஓடிப்போனதற்கான காரணத்தை வினவுகிறார்.

 

“உனக்கு இங்கிருப்பது பிடிக்கவில்லையா?” என்று பரிவோடு விசாரிக்கிறார்.

 

பள்ளி வளாகத்திலிருந்து சுவரேறிக் குதித்து ஓடிப் போனதற்கு கலைவாணன் சொன்ன காரணத்தைக் கேட்டால் நீங்களே சிரித்து விடுவீர்கள்.

 

அதற்குமுன் எங்கள் பள்ளி வளாகத்தைப் பற்றிய இச்சிறு குறிப்பை படிப்பது அவசியம்.

 

வண்டலூரில் எங்கள் பிறைப்பள்ளி (Crescent Residential School) நிறுவப்பட்டது ஒரு மாங்காய் தோப்பினில்தான். கட்டிடங்கள் யாவும் எழும்பிய பின்னரும் வளாகத்தினுள் எங்கு பார்த்தாலும் மாமரங்களில் மாங்காய் காய்த்துத் தொங்கும். வேண்டுமளவு மரத்திலேறி மாங்காய் பறித்துத் தின்பது எங்களது ‘வீரதீர’ பொழுதுபோக்காக இருந்தது.

 

“இங்கிருப்பது உனக்கு பிடிக்கவில்லையா….? ஏன் இங்கிருந்து சுவரேறிக் குதித்து ஓடினாய்..?” என்ற முதல்வரின் கேள்விக்கு கலைவாணன் சொன்ன பதில் இதுதான்.

 

“நான் மாந்தோப்பில் மாங்காய் பறித்து தின்பதற்காக சுற்றி வந்தேன். அப்போது ஒரு மாங்காயை பறித்து நான் உண்டேன், அது மிகவும் சுவையாக இருந்தது. அது சாப்பிட்டபின் அப்படியே தூங்கி விட்டேன் அப்புறமா கண்முழிச்சு பாத்தபோது நான் மவுண்ட் ரோடுலே நின்னுக்கிட்டு இருந்தேன். எனக்கு எப்படி ஸ்கூலுக்கு போறதுன்னு வழியே தெரியலே. அப்புறமா அப்படியே நான் வீட்டுக்குப் போயிட்டேன்”

 

இதை கலைவாணன் சொன்னபோது ஒரு சில ஆசிரியர்களும் கூடவே இருந்தார்கள். முதல்வாராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆசிரியர்களாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

கலைவாணனின் ‘சால்ஜாப்பு’ பதிலை பொறுமையாக காதுகொடுத்து கேட் ட எங்கள் பள்ளி முதல்வர் கூறிய பதில் என்ன தெரியுமா?

 

“அடேங்கப்பா….! கலைவாணா! நீ கதை சொல்வதிலும், கற்பனையிலும் உன் தகப்பனையே மிஞ்சிட்டே,,!” என்றார்.

 

கலைவாணன் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவன். பிசிறில்லாமல் சீராக பாடக் கூடியவன். கதை, கவிதை எழுதுவதிலும் அவனுக்கு ஆர்வம் அதிகம். ஒரு முறை கண்ணதாசன் எங்கள் பள்ளிக்கு வந்தபோது “அடி என்னடி ராக்கம்மா கண்டாங்கி நெனப்பு” என்ற பாடலை தாளம் பிசகாமல் எங்கள் எல்லோர் முன்னிலையிலும் இனிமையாக பாடிக் காட்டினான் அந்த நினைவலைகள் இன்னும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை.

 

நானும், பிரான்சு நாட்டில் இருக்கும் என் பள்ளி நண்பன் காரைக்கால் திப்பு சுல்தானும் சந்தித்து உரையாடும்போதெல்லாம் கலைவாணன் பற்றிய பேச்சு எப்படியாவது வந்துவிடும். பள்ளிப் பருவத்திற்கு மீண்டும் சென்று விடுவோம்.

 

ஒருநாள் காலை வேளையில் என் நண்பர் அஹ்மது தெளஃபீக்கிடமிருந்து ஓர் அதிர்ச்சியான செய்தி வந்தது.

 

காக்கா சேதி கேள்விப் பட்டியலா..?

என்ன செய்தி தெளஃபீக்..?

நம்ம கலைவாணன் இறந்து போயிட்டான் காக்கா.  இப்பத்தான் நான் கேள்விப்பட்டேன்

என் தலையில் பேரிடி விழுந்தது போலிருந்தது. எந்த கலைவாணன் என்றெல்லாம் நான் கேட்கவில்லை. காரணம் எங்களுக்குத் தெரிந்த ஒரே கலைவாணன் அவன்தான். துடிதுடித்துப் போனேன். என் உதிரம் சற்று நேரம் உறைந்து போனதுபோலிருந்தது

 

“அழியாத கோலங்கள்” படத்தில் அந்த குண்டு பையன் இறந்தபோது அவ்ற்ட்டவனது நண்பர்களுக்கு ஏற்பட்ட  அதே மனபாதிப்பு எங்களுக்கும் கலைவாணனின் திடீர் மறைவு அதிர்ச்சிக்குள்ளாகியது.

 

கலைவாணர் என்.எஸ்.கே.யின் நினைவாகவே கண்ணதாசன் தன் மகனுக்கு கலைவாணன் என்ற பெயரைச் சூட்டினார் . தனக்கு பிடித்தமானவர்களின் பெயர்களை தன் பிள்ளைகளுக்குச் சூட்டி அழகு பார்ப்பதில் கவியரசருக்கு அலாதிப் பிரியம்.

 

அறிஞர் அண்ணாவின் நினைவாக அண்ணாத்துரை; பாரதிதாசனின் நினைவாக கண்மணி சுப்பு (சுப்பு ரத்தின தாசன்).

 

தங்குவதற்கு இடமின்றி. தனது 14-வது வயதில் பிழைப்புத் தேடி சென்னையில் சுற்றித் திரிந்த கண்ணதாசனுக்கு எந்த மெரினாவிலுள்ள காந்தி சிலை வழியே திக்குத் தெரியாமல் சுற்றித் திரிந்தாரோ; அவருக்கு பிடித்த அதே காந்தி மகானின் நினைவாக இன்னொரு மகனுக்கு காந்தி என்ற பெயர்.

 

கலைவாணனுக்கு தன் தந்தையைப் போலவே குழந்தை மனசு. கண்ணதாசனுக்கும் அவன்மேல் அலாதிப் பிரியம். கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் பாலு மகேந்திராவின் “மூன்றாம் பிறை”  படத்தில்  இடம்பெற்ற    “கண்ணே கலைமானே” என்ற பாடல். (அவர் கடைசியாக எழுதிய பாடல் இடம் பெற்ற படம் “உன்னை நான் சந்தித்தேன் என்ற மாற்றுக் கருத்தும் உண்டு)

 

“கண்ணே கலைமானே!” என்ற பாடல் தன் தந்தை தன்னை நினைவில் வைத்துதான் எழுதினார் என்று கலைவாணன் பிற்காலத்தில் அவனுக்கு நெருங்கியவர்களிடம் பலமுறை கூறி மகிழ்ந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

 

தன் சகோதரன் கலைவாணனின் நினைவுகளை கண்ணதாசனின் இன்னொரு தாரத்தின் (புலவர் வள்ளியம்மை) செல்வப் புதல்வியான விசாலி கண்ணதாசன் கூறுவதைக் கேளுங்கள்:

 

“அவன் சாகக்கூடிய வயசில்ல. எமனுக்கு இது தெரியல. ரத்த உறவுன்னு இருந்த ஒன்னும் போச்சு. கலை அண்ணா இருந்திருந்தா சினிமாவில் பெரும் இயக்குநரா வந்திருப்பான்”

 

தன்மீது அளவில்லாத அன்பைப் பொழிந்த அன்புச் சகோதரனை இழந்தபோது இந்தச் சகோதரியின் மனம் எந்தளவுக்கு பாடுபட்டிருக்கும் என்பதை நம்மால் உணர முடிகின்றது.

 

தகப்பனின் அன்பை முழுமையாக அனுபவிக்க கொடுத்து வைக்காதவர் விசாலி என்றுதான் சொல்ல வேண்டும்.. கவிஞர் மரணிக்கையில் விசாலிக்கு கருத்து தெரியாத பருவம்.  அப்போது அவருக்கு வெறும் நான்கு வயதுதான்.

 

‘’அப்பாவோட மற்ற பதினான்கு பிள்ளைகளில் கலைவாணன் அண்ணாதான் என் கூட ஒட்டினான். மற்ற யாரும் என்கூட ஒட்டல”என்கிறார் விசாலி கண்ணதாசன்.

 

“கண்ணே கலை மானே”  பாட்டில் “கலை” என்று வருகிறது. அதனால் இது அப்பா எனக்காக எழுதிய பாட்டு என்று கலைவாணன் ஒருமுறை  தன் சகோதரிகளிடம் வாதம் புரிய, அவர்கள் அதை “இல்லை” என்று மறுக்க அதை உறுதிப்படுத்த நேராகவே சென்று தன் தந்தையிடம் சந்தேகம் கேட்டிருக்கிறான்.

 

இன்னொருமுறை கலைவாணன் தன் தந்தையிடம் ஓடிச்சென்று அவரைக்  கட்டிப்பிடித்து

 

“அப்பா.. நீங்க எல்லாரைப் பத்தியும் பாட்டு எழுதுறீங்க. என்னைப் பத்தியும் பாட்டு எழுதுங்கப்பா”

 

என்று செல்லமாக கேட்டிருக்கிறான். கவியரசரின் நகைச்சுவை உணர்வுக்கும், சமயோசித புத்திக்கும் அளவே கிடையாது. உடனே குறும்புத்தனமாக பதில் சொல்லியிருக்கிறார்.

 

“உன்னைப் பத்தி ஏற்கனவே எழுத்திட்டேனடா…” என்று கவிஞர் சொல்ல கலைவாணனுக்கு ஒரே ஆச்சரியம். “சொல்லுங்கப்பா..” என்று மீண்டும் அவர் தோளைப் பிடித்து உலுக்க

“ஏன் பிறந்தாய் மகனே! ஏன் பிறந்தாயோ?  பாட்டை உனக்காகத்தானே எழுதினேன்” என்றாராம் அந்த கவிராஜன் சிரித்துக் கொண்டே..

 

இந்த பதிலைக்கேட்ட மற்ற குழந்தைகளும் முண்டியடித்து அவர் மடிமேல் தவழ்ந்து

 

“அப்ப எங்களைப் பத்தியெல்லாம் ஒண்ணும் எழுதலையா..?” என்று சிணுங்கி இருக்கிறார்கள்.

 

கவிச்சக்கரவர்த்திக்கு பேச  சொல்லியா கொடுக்க வேண்டும்?

“அதுவும் எழுதி விட்டேனே..…!” என்றாராம். “அது என்ன பாட்டு?” என்று பிள்ளைகள் ஆர்வத்துடன் வினவ..

 

ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு
ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ராணி பெற்றால்
ஒன்பது பிள்ளை அந்த
ஒன்பதிலே ஒன்றுகூட
உருப்படியில்லை..
உருப்படியில்லை “

 

என்று பாடி முடித்துவிட்டு, “இதையெல்லாம் உங்களை மனசுலே வச்சுத்தான் எழுதினேன்” என்று பிள்ளைகளை கலாய்த்தாராம்.

 

பாவம் பிள்ளைகள். இந்த பதிலை அவர்கள் எதிர்ப்பார்க்கவில்லை. மறுபடியும் செல்லமாக சிணுங்கிக் கொண்டு ஓடி விட்டன. .

 

கண்ணதாசனுக்குள்ளே கவிஞர்களுக்கே உரித்தான குசும்பு சற்று அதிகமாகவே குடிகொண்டிருந்தது

 

எங்க ஊரில் ஒரு பழமொழி வட்டார வழக்கில் கூறுவார்கள். “இருந்தா நவாப்சா, இல்லேன்னா பக்கீர்சா”. கண்ணதாசனைப் போல் லட்சக்கணக்கில் சம்பாதித்தவரும் இல்லை. அதுபோல   செலவழித்தவர்களும் இல்லை.  அப்போது லட்சங்கள் கோடிகளுக்குச் சமம்.

 

பெருமளவு சம்பாதித்துக் கொண்டிருந்த வேலையிலும் கடனில் மூழ்கி கண்ணதாசன் தன் குழந்தைகளுக்கு தீபாவளியன்று புதுத்துணிமணி, பாட்டாசுகள் வாங்கிக் கொடுக்க முடியாத நிலையில் கண்ணீர்கூட வடித்திருக்கிறாராம்.

 

கண்ணதாசன் சில சமயம் இரவில் தாமதமாக வீடு திரும்புவார். சில பிள்ளைகள் முழித்துக்கொண்டு அவருக்காக காத்திருப்பார்கள். ஜாலியான மூடு வந்துவிட்டால் தனது அம்பாஸிடர் காரை எடுத்துக் கொண்டு மவுண்ட்ரோடிலுள்ள புகாரி அல்லது பிலால் ஓட்டலிலிருந்து வகைவகையான அசைவ உணவு பார்சல் கொண்டுவந்து வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். இறால், நண்டு, முயல்கறி, மான்கறி எல்லாமே விரும்பிச் சாப்பிடுவார்.

 

“பறப்பதில் ஏரோப்பிளேனும், ஓடுவதில் ரயிலும் மட்டும்தான் நான் சாப்பிடாதது” என்று நகைச்சுவையாகச் சொன்னதை ஒரு பத்திரிக்கை பேட்டியின்போது காந்தி கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார்.

 

“குழந்தைகளுக்கு இடையே வித்தியாசம் வரக்கூடாது என்பதற்காக எல்லோருக்கும் யூனிஃபார்ம் மாதிரி ஒரே கலரில் ட்ரவுசர், சட்டை, பாவடை வாங்கித் தருவார்” என்று தன் தந்தை பற்றிய சுவையான நினைவுகளைப் பகிர்கிறார் காந்தி கண்ணதாசன்.

 

—-அப்துல் கையூம்

 

– —- இன்னும் தொடரும்

கண்ணதாசன் நினைவுகள் – பாகம் 1

சொன்னது நீதானா…?

%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88

வெறும் சித்தாரையும் மிருதங்கத்தையும் வைத்துக் கொண்டு ஒரு சிறப்பான பாடலை கொடுக்க முடியுமென்றால் அது எம்.எஸ்.வி.யால் மட்டும்தான் முடியும்.

“நெஞ்சில் ஓர் ஆலயம்”  படத்தில் வரும் “சொன்னது நீதானா..” பாடல் கல்மனதையும் கரைய வைக்கும்.

தாய்மொழி தமிழல்லாத ஒரு பாடகி (பி.சுசிலா) இந்த அளவுக்கு தெளிவ்வன உச்சரிப்போடு, பாவத்தோடு, உணர்ச்சிகளைக் கொட்டி நம் மனதை உருக வைத்திருப்பதை வார்த்தைகளால் வருணிக்க இயலாது.

கண்ணதாசன் எழுதிய பாடல்களில் பொருள் நிறைந்த படக்காட்சியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எழுதப்பட்ட பாடலிது.

படத்தைப் பார்க்காமலேயே, வெறும் பாட்டை மட்டும் கேட்டு விட்டு இக்காட்சியையும், பாத்திர அமைப்பையும் நம்மால் ஊகித்துவிடமுடியும்.

இன்றைய கவிஞர்களால் இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ற பாடல் அதே படத்தளத்தில் எழுத முடியுமா என்பது சந்தேகமே.

பாடல் எழுதுவதற்காக கண்ணதாசனுக்கு வேண்டி காத்திருக்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

நண்பனை “இந்த குடிகாரன் எப்ப வருவானோ?” என்று விமர்சிக்கிறார் அவர். இந்தச் செய்தி கவியரசரின் காதுகளுக்கு எட்டுகிறது. கடும் சொற்கள் அவர் மனதை முள்ளாய்த் தைக்கிறது. இடனே பாடலும் பிறந்து விடுகிறது.

“சொன்னது நீதானா?

சொல்…சொல்..சொல்.. என்னுயிரே”

கண்ணதாசன் நினைவுகள்

img_1132

“அன்புள்ள அத்தான்:” படத்தில் ஷோபாவுடன் கலைவாணன்

கலைவாணன்

என் இளமைக் காலத்தில் கண்ணதாசன் என்ற மாபெரும் ஆளுமை பொருந்திய மனிதனோடு ஓரிரண்டு முறை பேசிப் பழக வாய்ப்பு கிட்டியதையும், அவரது தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில் பங்குகொண்டு நான் கவிதை வாசித்ததையும், அவரிடம் “சபாஷ்” வாங்கியதையும் இன்றளவும் பெருமையோடு எண்ணிப் பார்க்கிறேன்.

 

“வசிட்டர் வாயால் பிரம்மரிஷி” பட்டம் பெற்றதைப் போல் என்று முதுமொழி  சொல்வார்களே அதை அன்று நான் முழுவதுமாக உணர்ந்தேன்.

 

எனது பள்ளிப் பருவத்தின்போது, வண்டலூர் பிறைப்பள்ளியில் (Crescent Residential School) என்னோடு படித்த சகமாணவர்களுக்கும் அவரைச் சந்தித்து உரையாடுகின்ற அரிய வாய்ப்பு கிடைத்தது, அப்படிப்பட்ட ஓர் அதிர்ஷ்டம் எங்களுக்கு வாய்த்தமைக்கு வலுவான காரணம் ஒன்று உண்டு.

 

அதற்கான காரணம் என் நண்பன் கலைவாணன் கண்ணதாசன்.

 

கலைவாணன் என்னைவிட வயதிலும் வகுப்பிலும் ‘ஜூனியர்’. அவன் தந்தையின் தமிழாற்றலுக்கு மனதைப் பறிகொடுத்த நான், கலைவாணனுடன் நல்ல நட்புறவு கொண்டிருந்தேன். அவனுக்குள்ளும் தன் தந்தைபோலவே கதை, கட்டுரை, கவிதை, நடிப்பு என அனைத்துக் கலைகளிலும் ஆர்வம் குடிகொண்டிருந்தது.

 

எங்களோடு ஹாஸ்டலில் தங்கி ஒன்றாக பழகிய சகமாணவன் அவன். சென்னை மாநகரத்திலேயேதான் கண்ணதாசன் வீடும் இருந்தது. இருந்தபோதிலும் ஹாஸ்டலில் பிறமாணவர்களுடன் தங்கியிருக்கும்போது, அவனது வாழ்க்கையில் உலக அனுபவங்கள் இன்னும் கூடுதலாக கிடைக்கும், எல்லோருடனும் சேர்ந்து பழகும் சந்தர்ப்பம் உண்டாகும் என்ற எதிர்ப்பார்ப்பில் அவனை வண்டலூர் கிரெசெண்ட் பள்ளியில் கவியரசர் சேர்த்திருந்தார்.

 

தன் மகனின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று நினைக்கும்  எல்லா தகப்பன்மார்களைப் போலவே கண்ணதாசனும் ஆசைப்பட்டார். என்னைப் பொறுத்தவரை கண்ணதாசன் ஒரு சிறந்த கவிஞனாக மட்டுமல்ல. சிறந்த தகப்பனாகவும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.

 

மூன்று பெண்மணிகளை அவர் மணம் முடித்தார், அவருக்கு 14 குழந்தைகள் இருந்தன என்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி சிலர், அவர் சிறந்த குடும்பத் தலைவானாக இருக்கவில்லை என்று குறை கூறுவதை ஒருநாளும் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.

 

கண்ணதாசனின் முதல் மனைவி பொன்னழகி என்ற பொன்னம்மா வயிற்றில் உதித்தவன் என் நண்பன் கலைவாணன். அம்மையாருக்கு நான்கு மகன்கள்: கண்மணி சுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம். மூன்று மகள்கள்; அலமேலு, தேனம்மை, விசாலாட்சி.

 

கண்ணதாசன் அமெரிக்காவிலுள்ள தமிழ் சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளச் சென்று அவருக்கு அங்கு  மாரடைப்பு  ஏற்பட்டு சிக்காகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.  அப்போது அவரோடு உடனிருந்து கவனித்துக்கொள்ள  இங்கிருந்துச் சென்ற அவரது குடும்பத்தினர் மூன்று பேர்கள்.

 

அவருடைய மனைவிகள் பார்வதி, வள்ளியம்மை, மற்றும் அவருடைய அன்புக்கு பாத்திரமான செல்ல மகன் கலைவாணன். கவிஞரின் உயிர் பிரிந்து அங்கிருந்து  அவருடைய பூதவுடல் விமானத்தில் தாயகம்  வந்தபோது இவர்களும் விமானத்தில் கூடவே வந்தார்கள்.

 

கலைவாணன் மீது மற்ற குழந்தைகளைக் காட்டிலும் சற்று கூடுதலாகவே பற்றும் பாசமும் கவிஞர் வைத்திருந்தார் என்பது என் எண்ணம். எனது இந்தக் கருத்தில் அவரது மற்ற குழந்தைகளுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அதனால்தான் இது எனது சொந்தக் கணிப்பு என்பதை இங்கே கோடிட்டுக் காட்டியுள்ளேன்.

 

யாசீன் காக்காவும் கண்ணதாசனும்

yaseen-kaka

கீழக்கரை ஆ,மு.அஹ்மது யாசீன்

கலைவாணன் கண்ணதாசனை எங்கள் பள்ளியில் சேர்க்க கவிஞர் பெருமகனாருக்கு ஆலோசனை வழங்கியது கீழக்கரையைச் சேர்ந்த யாசீன் காக்கா அவர்கள்தான். வளநாடு சினி ரிலீஸ், கிரஸெண்ட் மூவீஸ், வச்சிர நாடு பிலிம்ஸ் , செம்பி பிலிம்ஸ், சேது பிலிம்ஸ் போன்ற சினிமா சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனங்களில் பங்குதாரராக இருந்தவர் அந்த பிரபலம்.  நடிகர் பாலாஜி போன்ற படத்தயாரிப்பாளர்கள் யாசீன் காக்காவுடன் மிக நெருக்கமாக இருந்தார்கள். நான் ஏற்கனவே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைப்போல 1970 – 1980 கால கட்டங்களில் தமிழகத்தில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் இவர்களின் தொடர்பு இல்லாமல் வெளிவந்ததில்லை.

 

%e0%ae%af%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be

பாலாஜி, ரஜினிகாந்துடன் யாசீன் காக்கா புகைப்பட உதவி:சோனகன் மஹ்மூது

திரைப்படத்துறையில் மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் கவியரசர் கண்ணதாசனுக்கு யாசீன் காக்கா மிகவும் வேண்டப்பட்ட நபராக இருந்தார். கவிஞர், உயிருக்கு உயிராக நேசித்த நண்பர்களின் பட்டியலில் யாசீன் காக்காவுக்கும் இன்றிமையாத ஓர்    ஒரு இடமுண்டு. கண்ணதாசனுக்கு சினிமாத் துறையில்  பொருளாதார ரீதியாக  நிறைய உதவிகள் அவர் புரிந்திருக்கிறார்.

 

அக்கால கட்டத்தில் ‘குமுதம்’ இதழில் “என் எனிய நண்பர்கள்” என்ற தலைப்பில் தன் நெஞ்சில் நீங்காது இடம்பெற்றிருந்த நண்பர்களைப் பற்றி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து கண்ணதாசன் கவிதை எழுதிவந்தார்.

 

வானதி பதிப்பகம் திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் மாதவன், யாசீன் காக்கா போன்றோர் கண்ணதாசனின் இதயத்தில் தனியொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்கள். மற்றவர்களின் பெயர்கள் எனக்கு நினைவுக்கு வரவில்லை.

 

அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் அழகுற தமிழில் அட்டகாசமாக கவிதைகள் வடித்தார். ஒவ்வொரு வாரமும் அடுத்ததாக யாரைப் பற்றி எழுதப் போகிறார் என்ற ஆர்வத்தில் குமுதம் இதழுக்காக நான் காத்திருப்பேன்.

 

[யாசீன் காக்காவுக்கும் முன்னாள் திமுக அமைச்சர் மாதவனுக்குமிடையே நெருங்கிய நட்புறவு நீடித்து வந்தது. அது ஒரு தனி ட்ராக். மாதவனை ஒருமையில் “அவன்”, “இவன்” என்று அழைக்குமளவுக்கு இருவருக்குமிடையே நெருக்கம் நிலவி வந்தது]

 

தனது நண்பர் யாசீன் காக்கா அவர்களைப்பற்றி கண்ணதாசன் “குமுதம்” இதழில் எழுதியிருந்த  ஒரு சில வரிகள் பசுமரத்தாணியாய் என் மனதில் இன்னும்  பதிந்துள்ளது; ஆழமாய் பொதிந்துள்ளது.

yasin

கண்ணதாசனுடன் யாசீன் காக்கா – புகைப்பட உதவி: சோனகன் மஹ்மூது

எப்போதும் புன்சிரிப்பு
எவரிடத்தும் பேசும்போதும்
தப்பாக ஒருவார்த்தை
தவறியேனும் சொல்வதில்லை
தழுவவரும் நண்பருக்கு
தங்கக்கட்டி
முப்பாலில் வள்ளுவனார்
வாழ்க்கை எல்லாம்
முன்பாக காணவரும்
எளிய வாழ்க்கை
அப்பழுக்கில்லா(த) எங்கள் சேதுநாட்டு
யாசீன்பாய் எனதுஇனிய நண்பராவார்

 

[மேற்கண்ட கவிதையில் ஒன்றிரண்டு சொற்கள் விடுபட்டிக்கலாம், காரணம் இது முறையான மரபுக்கவிதை வடிவில் இருந்தது. நினைவில் இருந்ததை மட்டும் இங்கே வடித்திருக்கிறேன்.]

 

தன் மனதுக்கு உகந்த நண்பருக்கு இதைவிட ஒரு சிறந்த சன்மானம் என்ன கொடுக்க முடியும்? அதுதான் கண்ணதாசன்.

 

கண்ணதாசனைக் காணச் சென்ற நான்

 

ஒருமுறை கண்ணதாசனைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட எனக்கு கலைவாணனுடன் காணச் சென்ற அந்த நிகழ்வு மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறது. அதை நினைத்தாலே இனிக்கும்.

 

சென்னை தியாகராய நகரில், நடேசன் பூங்காவுக்கு பின்புறம் இருந்தது அவர் வீடு. எழுதுவதற்கு பெரும்பாலும் தனிமையை விரும்பி கவிதா ஓட்டலில் தங்கியிருப்பது கவிஞரின்   வழக்கம். அன்று அவர் தி.நகர் வெங்கட நாராயணா சாலையிலுள்ள வீட்டில் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அங்குச் சென்றோம். அம்பாஸிடர் கார் ஒன்று வெளியில் நின்றிருந்தது. வயிற்றுக்கு மேலே உயர்த்திக் கட்டிய வேட்டியோடு வீட்டின் வெளியே அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தார் அந்த கவிப்பேரரசர்.

 

அருகில் சென்று அவரைப் பார்த்த நான், என்னை நானே ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்; நான் காண்பது கனவா அல்லது நனவா என்று புரியாமல் திகைத்தேன்.

 

ஆஜானுபாகுவான உடல்வாகு. கம்பீரமானத் தோற்றம். உருண்டையான முகம். கள்ளம் கபடமற்ற வெளிப்படையான பேச்சு.

 

கலைவாணனுக்கும் கண்ணதாசனுக்கும் தோற்றத்தில் நிறைய ஒற்றுமை இருந்தது. ‘ஜெராக்ஸ்’ காப்பி எனலாம்.

 

“ரத்தத் திலகம்”  படத்தில் கோட்டு சூட்டு அணிந்துக்கொண்டு “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” என்று பாடி நடித்த கலைஞனா அவன் என்ற பிரமிப்பு என்னை ஆட்கொண்டு என்னை ‘மெளனி’யாக்கியது.

 

நாடோறும் சிலோன் வானொலியில் கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீது போன்றோர் அனுதினமும் சுவைத்து பாராட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரன் முன் நான் நிற்கின்றேன் என்ற உணர்வு ‘ஹை-ஹீல்ஸ்’ அணியாமலேயே என்னை உயர்த்திக் காண்பித்தது.

 

அவரது தீவிர ரசிகன் என்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். எத்தனையோ கேள்விகள் அவரிடம் கேட்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டுச்  சென்றேன்.   ஊஹீம்….    எதுவுமே கேட்கத் தோன்றவில்லை.  எனக்கு பேச்சே எழவில்லை.  “பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போல” அவரையே பார்த்துக்கொண்டு பிரமித்துப் போய் நின்றேன். அப்பொழுது ஒன்பது அல்லது பத்தாவது வகுப்பு  நான்  படித்துக் கொண்டிருந்தேன்.

 

சிறுகூடல்பட்டி சிந்தனைவாதி பேசப்பேச நான் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். பாசமலர் படத்தில் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்”  என்ற அவரது   பாடலுக்கு சிவாஜி கணேசன்    ” உம்…உம்.. உம்..உம்,”  , என்று ‘உம்’ கொட்டிக்கொண்டிருப்பார்.  அதுபோல நான் ‘உம்’ கொட்டிக் கொண்டிருந்தேன்.

 

எங்கள் பள்ளிக்கூட வாழ்க்கைப் பற்றி விசாரித்துவிட்டு, அவரது அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்தார். எங்களுக்கு புத்திமதியும் கூறினார்.

 

அவரை சந்தித்துவிட்டு திரும்பி வருகையில் என்னாலேயே நம்ப முடியவில்லை; நான் பார்த்து பேசிவிட்டு வந்தது தமிழகத்தையே தன் எளிமையான சொற்களால் கட்டுண்டு அடிமைப்படுத்திய அந்த கவிராஜனைத்தானா என்று……

 

—அப்துல் கையூம்

(நினைவுகள் இன்னும் பல பாகங்களாகத் தொடரும் (இன்ஷா அல்லாஹ்)

பார்அவதி கண்ணதாசன்

%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d

ஒருமுறை கவிஞர் கண்ணதாசனிடம் அவரது துணைவியார் பார்வதி அம்மாள் சென்று   “நான் மோதிரம் செய்து அணிந்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.  மோதிரத்தில் அச்சடிக்க உங்கள் கைப்பட ‘பார்வதி கண்ணதாசன்’  என்று எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.

அவரும் தன் மனைவியின் விருப்பப்படியே தன் கைப்பட எழுதிக் கொடுக்கிறார். அவர் மனைவியும் அதனை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து அவரை மீண்டும் அழைத்து ” நான் எழுதியதை சரியாக வாசித்தாயா..?” என்று புதிர் போட , அந்த வாக்கியத்தை மீண்டும் பார்வதி அம்மாள் படித்துப் பார்க்கிறார்.

அதில் “பார் அவதி கண்ணதாசன்” என்று எழுதி இருக்கிறது.

கல்யாணமான அத்தனை புருஷன்மார்களும் நம்மை போலவேதான் அவதிபடுகிறார்கள் போலிருக்கிறது.

என்ன இருந்தாலும் கவிஞர் கண்ணதாசன் அனுபவக் கவிஞர் அல்லவா..?

—அப்துக் கையூம்

 

 

பெண்களும் கண்களும்

கண்களைப் புகழாத காதலனும் இல்லை; கண்களைப் பாடாத கவிஞனும் இல்லை.

கண், காது, மூக்கு, நாக்கு கை, கால் எல்லாமே உடல் உறுப்புக்கள்தான். ஆனால் ஏனோ கண்களுக்கு மாத்திரம் ஒரு தனி மரியாதை; தனியொரு அந்தஸ்து.

தலைவன் தலைவியை விளிக்கும்போது மூக்கே, நாக்கே, காதே என்று அழைத்து மகிழ்வதில்லை (நாக்கு மூக்கா பாடல் இதில் சேர்த்தி இல்லை ப்ளீஸ்..)

காதலன் “கண்ணே!” என்று அழைப்பதில்தான் மனநிறைவு கொள்கிறான், இன்னும் ஒரு படி மேலே சென்று “கண்மணியே!” என்று அழைக்கின்றான்.  அவளோ “கண்ணாளனே” என்று அழைக்கிறாள்

The Night has a thousand eyes

And the day but one

என்று ஆங்கிலக் கவிஞன் பிரான்ஸில் வில்லியம் போர்டிலோன் பாடினான். அதே கருத்தை

இரவுக்கு ஆயிரம் கண்கள்

பகலுக்கு ஒன்றே ஒன்று

என்று கவிஞர் கண்ணதாசன் பாடி வைத்தான்.

வெறும் எட்டாம் வகுப்புவரை மட்டுமே பயின்ற கண்ணதாசன் ஆங்கில இலக்கியங்கள் அனைத்தையும் கற்றறிந்த பிறகுதான் எழுதினானா அல்லது Great minds think alike என்ற கூற்றின்படி எல்லா அறிவு ஜீவிகளுக்கும்  ஒரேபோன்ற கருத்துக்கள் பிறக்கின்றனவா என்று தெரியவில்லை.

இந்த இரண்டு கவிஞர்களும் விண்மீன்களை கண்களுக்கு உவமை படுத்தி பாடுகிறார்கள். அதைவிட மீன்களை கண்களுக்கு ஒப்பீடு செய்த கவிஞர்களே அதிகம்.

eyes

அரிதாரம் பூசும் பெண்கள் கண்களின் ஓரங்களுக்கு வால் வரைந்து, மை தீட்டுவது அவைகள் மீன்கள் போல் காட்சியளிக்கத்தானோ என்னவோ..?

சிறு மணல் வீட்டில் குடிஏறும் நண்டானது

இவள் கண் பார்த்து மீன் என்று திண்டாடுது

என்று பாடுகிறார் கவிஞர் வாலி.

நாகூரிலேயே தன் வாழ்நாட்கள் முழுவதையும் கழித்த வண்ணக் களஞ்சியப் புலவரின் கற்பனையைப் பாருங்கள்.

பொருது வெண்பளிங்குத் தளத்தில் நின்றிடில்அத்

தளம்குளிர் புனல்என நெடிய

கருவிழி இரண்டு கயல்எனத் தோன்றக்

கண்டுவந்து உடல்அசை யாது

விரிசிறை அசைத்துஅந்த ரத்தின்நின்று எழில்சேர்

மீன்எறி பறவை வீழ்ந் திடுமே!

என்று பாடுகிறார் அவர்.

உயர்ந்த நிலைமாடத்தில் நிற்கும் எழில் மங்கைகளின் கண்கள் பிம்பமாக பளிங்குத் தரையில் காட்சி தருகின்றனவாம். அந்தரத்திலிருந்து பறந்து வரும் மீன்கொத்தி பறவை அவைகளை மீன்கள் என்று நினைத்து கவ்விக்கொள்ள பாய்ந்து பளிங்குத் தரையில் மோதி பலனற்று போகிறதாம்.

கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி

பின்சென்றது அம்ம சிறுசிரல்;  பின்சென்றும்

ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்

கோட்டிய வில்வாக் கறிந்து.

இது நாலடியார் பாடல்.

அவளின் கண்களை மீன் என்று எண்ணி கொத்தி தின்ன முயன்றதாம்  மீன் கொத்திப் பறவை. ஆனால், அருகில் போனவுடன் அவளின் வில் போன்ற புருவத்தை பார்த்து பயந்து கொத்தாமல் சென்று விட்டதாம்.

நாலடியாரும், வண்ணக்களஞ்சியப் புலவரும், கண்ணதாசனும் ஒருவரையொருவர் காப்பியடித்து எழுதினார்கள் என்று நான் நினைக்கவில்லை.  கற்பனைக் கடலில் அவரவர்கள் மூழ்கி முத்து எடுக்கிறார்கள். சிற்சமயம் அவைகள் ஒரே மாதிரியாக அமைந்து விடக்கூடும்.

பூவா தலையா என்ற படத்தில் கவிஞர் வாலி ஒரு பாடல் எழுதினார்.

மதுரையில் பிறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே – போரில்

புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே !

 

வாலியின் கற்பனையிலும் புருவம் வில்லாகவே தெரிகிறது.

I don’t think they are all copy cats.. கற்பனை உலகம் என்பது பரந்து விரிந்தது. அண்டசராசரம் பெரிதா அல்லது கற்பனை உலகம் பெரிதா என்று என்னை கேட்டால் கற்பனை உலகம்தான்  பெரிதென்பேன் நான்..

“மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா”  என்று பாடுகிறார் கவிஞர் பிறைசூடன்.

கண்களால் பாடவும் முடியும். ஆச்சரியமாக இருக்கின்றதா? “கண்களும் கவி பாடுதே” பாடல் அதற்ககோர் எடுத்துக்காட்டு.

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.

மேற்கூறிய திருக்குறளின் கருத்தைத்தான் கண்ணதாசன்

உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே

நேரிலே பார்த்தால் என்ன நிலவென்ன தேய்ந்தா போகும்?

புன்னகை புரிந்தால் என்ன பூமுகம் சிவந்தா போகும்?

என்று எளிமையாக பாடி வைத்தான். .கற்பனைக்கு “கமா”தான் (Comma) உண்டு. முற்றுப்புள்ளி கிடையாது.

-அப்துல் கையூம்

 

அற்றைத் திங்கள்

கண்ணா 2

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் டீச்சர் எங்களுக்கு கதை சொல்லுகையில் இப்படி ஆரம்பிப்பார் “Long Long ago, So long ago; nobody knows how long ago”

கமல்ஹாசன் சில காலத்திற்கு முன்பு “அற்றை திங்கள்” என்ற காணொளி பக்கம் ஒன்றை தொடங்கினார்.

“அற்றை திங்கள் என்றால் என்ன?”

“Long Long  Ago” அல்லது “Once upon a time” என்பதை சங்கத் தமிழில் சொல்வதுதான் இந்த அற்றைத்திங்கள்.

“சிவாஜி”  படத்தில் வரும் அங்கவை, சங்கவை எனும் பாத்திரங்கள் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். முல்லைக்குத் தேர் தந்த பாரியின் மகள்களின் பெயர்கள் இவை.. எங்கள் தமிழ்க்குலப் பெண்களை எப்படி கண்ணேங் கரேலென காட்டி கிண்டல் அடிக்கலாம் என சங்கருக்கு அப்போது எதிர்ப்பு வேறு தெரிவித்தார்கள்.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.

என்று புறநானூற்றில் காணப்படும் பாடல் இந்த பாரிவள்ளல் மகள்கள் பாடியதுதான். அதன் பொருள்:

“மூவேந்தரும் முற்றுகை இட்டிருந்த அந்த நிலாக் காலத்து வெண்மையான நிலா ஒளியில் எங்கள் தந்தை எங்களுடன் இருந்தார்.. எங்களுடைய மலைக்குன்றும் அப்போது எங்களிடம்தான் இருந்தது. இந்த நிலாக் காலத்தில் அதை வென்று முரசு ஒலிக்கும் இந்த வேந்தர்கள் எங்கள் மலைக்குன்றையும் அபகரித்து விட்டார்கள். நாங்கள் எங்கள் தந்தையை இழந்து நிற்கின்றோம்”. என கையறு நிலையில் பாடிய பாடலிது.

கடந்தகாலம் பசுமையாக இருந்தால் “அது ஒரு நிலாக்காலம்” என்று நினைவுகளை அசைபோட்டு ஏக்கத்துடன் நாம் சொல்வதுண்டு.

“இருவர்” படத்தில் வைரமுத்து இந்த சங்ககால வார்த்தைகளைப் போட்டு

அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய

ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா..?

என்று பாடல் எழுதினார்.

அதன் பின்னர் “சிவப்பதிகாரம்” படத்திற்கு கவிஞர் யுகபாரதி “உங்களுக்கு மட்டும்தான் வருமா? எங்களுக்கும் சங்கத்தமிழ் போட்டு பாடல் எழுத வரும்” என்று

அற்றைத் திங்கள் வானிடம்

அல்லிச் செண்டோ நீரிடம்

சுற்றும் தென்றல் பூவிடம்

சொக்கும் ராகம் யாழிடம்

என்று தன் கவித்திறமையைக் காட்டி அசத்தினார்.

பாரி மகளிர் அங்கவை, சங்கவை பாடிய அந்த பாடலைத்தான் கவிஞர் கண்ணதாசன் எளிமையான வரிகளில்

அன்றொரு நாள் இதே நிலவில்

அவர் இருந்தார் என் அருகே

என்று எளிமையான வார்த்தைகளில் எழுதி விட்டுப் போனார். படித்தவனுக்கு மட்டுமே புரியக்கூடிய வகையில் இருந்த கவிச்சுவையை பாமரனுக்கும் எட்டி வைத்ததால்தான் “கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு” என்று இப்போதும் பாடல் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

– அப்துல் கையூம்