நேரு மறைந்தபோது எழுதிய கண்ணதாசனின் கண்ணீர் அஞ்சலி – இளையராஜாவின் குரலில்
பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்
சீரிய நெற்றி எங்கே
சிவந்தநல் இதழ்கள் எங்கே
கூரிய விழிகள் எங்கே
குறுநகை போன தெங்கே
நேரிய பார்வை எங்கே
நிமிர்ந்தநன் நடைதான் எங்கே?
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்த திங்கே!
அம்மம்மா என்ன சொல்வேன்
அண்ணலைத் தீயிலிட்டார்
அன்னையைத் தீயிலிட்டார்
பிள்ளையைத் தீயிலிட்டார்
தீயவை நினையா நெஞ்சைத்
தீயிலே எரியவிட்டார்
தீயசொல் சொல்லா வாயைத்
தீயிலே கருகவிட்டார்!
வேறு
பச்சைக் குழந்தை
பாலுக்குத் தவித்திருக்க
பெற்றவளை அந்தப்
பெருமான் அழைத்துவிட்டான்
வானத்தில் வல்லூறு
வட்டமிடும் வேளையிலே
சேய்கிளியைக் கலங்கவிட்டுத்
தாய்க்கிளியைக் கொன்றுவிட்டான்
சாவே உனக்குகொருநாள்
சாவு வந்து சேராதோ!
சஞ்சலமே நீயுமொரு
சஞ்சலத்தைக் காணாயோ!
தீயே உனக்கொருநாள்
தீமூட்டிப் பாரோமோ!
தெய்வமே உன்னையும் நாம்
தேம்பி அழ வையோமோ!
யாரிடத்துப் போயுரைப்போம்!
யார்மொழியில் அமைதிகொள்வோம்?
யார்துணையில் வாழ்ந்திருப்போம்?
யார்நிழலில் குடியிருப்போம்?
வேரோடு மரம்பறித்த
வேதனே எம்மையும் நீ
ஊரோடு கொண்டுசென்றால்
உயிர்வாதை எமகில்லையே…
நீரோடும் கண்களுக்கு
நிம்மதியை யார்தருவார்?
நேருஇல்லா பாரதத்தை
நினைவில் யார் வைத்திருப்பார்?
ஐயையோ! காலமே!
ஆண்டவனே! எங்கள்துயர்
ஆறாதே ஆறாதே
அழுதாலும் தீராதே!
கைகொடுத்த நாயகனைக்
கண்மூட வைத்தாயே
கண்கொடுத்த காவலனைக்
கண்மூட வைத்தாயே
கண்டதெல்லாம் உண்மையா
கேட்டதெல்லாம் நிஜம்தானா
கனவா கதையா
கற்பனையா அம்மம்மா…
நேருவா மறைந்தார்; இல்லை!
நேர்மைக்குச் சாவே இல்லை!
அழிவில்லை முடிவுமில்லை
அன்புக்கு மரணம் இல்லை!
இருக்கின்றார் நேரு
இங்கேதான் இங்கேதான்
எம்முயிரில், இரத்தத்தில்,
இதயத்தில், நரம்புகளில்,
கண்ணில், செவியில்,
கைத்தலத்தில் இருக்கின்றார்
எங்கள் தலைவர்
எமைவிட்டுச் செல்வதில்லை!
என்றும் அவர் பெயரை
எம்முடணே வைத்திருப்போம்
அம்மா…அம்மா….அம்மா…..!
3 responses to “நேருவை நினைவுறுத்தும் பாடல் – இளையராஜா”
SAKTHIVEL
October 17th, 2012 at 14:08
better and best about nehru
ram
April 21st, 2013 at 09:01
please take that “padalai ketka inge sodukkavum”
Vishali mahendran
March 18th, 2017 at 11:03
Vaarthaikku uyir thantha varakkaviyin kavithai thoguppu arumai……
nigarilla manithan