Archive for March, 2013

அத்திக்காய்

அத்திக்காய் காய் காய் – சிலேடை

அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

என்ற கண்ணதாசனின் பாடலைப் பலரும் கேட்டிருப்பீர்கள். இதை வெறும் சினிமாப்பாட்டு என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். சங்ககாலத்துப் பாடல் ஒன்றிலிருந்து சில வரிகளை எடுத்து கண்ணதாசன் திரையிசையில் கலக்கிய பாடல். இதை சினிமாவில் போடுகிறேன் என்றதற்கு எம் எஸ் வி கண்ணதாசனை விடவில்லை. இதெல்லாம் மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்று புறந்தள்ளிவிட்டார்.

கண்ணதாசன் கண்களில் கண்ணீர். அடடா கண்ணதாசா இதுக்கெல்லாம் அழலாமா சரி சரி போடலாம் விடு என்று எம் எஸ் வி சம்மதித்திருக்கிறார் இந்தப் பாட்டில் வரும் காய்களை உற்றுக்கவனியுங்கள். அவற்றுள் வேறு அர்த்தங்கள் பொதிந்துள்ளன. இது மிகமிக இலக்கியத்தரம் வாய்ந்த சினிமாப் பாடல். அதனால் எனக்கு மிக மிகப் பிடித்தபாடல்.

தமிழ்க் கவிதை இலக்கியத்தில் ஒரு சுவாரசியமான விசயம் சிலேடை. இரு பொருளைத்தரும் ஒரு சொல் அல்லது வரி அல்லது பாடல்தான் சிலேடை. நேரடியாக ஒரு பொருளும் மறைமுகமாக இன்னொரு பொருளும் அந்தப் பா வகைக்குள் ஒளிந்துகிடக்கும். இதற்கு உதாரணமாய் எத்தனையோ பாடல்களைச் சொல்லலாம். அதில் ஒன்றுதான் இந்த அத்திக்காய் காய் காய்.

அந்த சங்ககாலப்பாடலில் வருவது சில காய்கள்தான். ஆனால் அதைத் தழுவி கண்ணதாசன் எழுதிய திரையிசைப்பாடலில் ஏகப்பட்ட காய்கள். கொத்தவால் சாவடிக்குள் நுழைந்துவிட்டதைப் போல கமகமக்கும்

அத்திக்காய்
ஆலங்காய்
இத்திக்காய்
கன்னிக்காய்
ஆசைக்காய்
பாவைக்காய்
அங்கேகாய்
அவரைக்காய்
கோவைக்காய்
மாதுளங்காய்
என்னுளங்காய்
இரவுக்காய்
உறவுக்காய்
ஏழைக்காய்
நீயும்காய்
நிதமுங்காய்
இவளைக்காய்
உருவங்காய்
பருவங்காய்
ஏலக்காய்
வாழக்காய்
ஜாதிக்காய்
கனியக்காய்
விளங்காய்
தூதுவழங்காய்
மிளகாய்
சுரைக்காய்
வெள்ளரிக்காய்
சிரிக்காய்
கொற்றவரைக்காய்
தனிமையிலேங்காய்

எத்தனைக் காய்கள் பாருங்கள். இத்தனையையும் கொண்டு கண்ணதாசன் எழுதிய அருமையான பாடல்தான் அத்திக்காய் காய் காய். இதோ முழுப்பாடலும். பாடலை முதலில் பாடிப்பார்த்துக்கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொரு வரியையும் நாம் அலசுவோம்.

அத்திக்காய் காய்காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய்
காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேகாய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்
எங்கும் இந்த ஏழைக்காய்
நீயுங்காய் நிதமுங்காய்
நேரில் நிற்கும் இவளைக்காய்

உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

(அத்திக்காய்)

ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம்போல்
தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

(அத்திக்காய்)

உள்ளமெலாம் மிளகாயோ
ஒவ்வொருபேச் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல்
வெண்ணிலவே நீ சிரிக்காயோ

கோதை எனைக் காயாதே
கொற்றவரைக்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையிலேங்காய் வெண்ணிலா

(அத்திக்காய்)

நன்றி: அன்புடன் புகாரி

கவிஞரும் கர்மவீரரும்

Kannadasan & Kamraj