கண்ணதாசனும் கருணாநிதியும்

கண்ணதாசனைப் புகழ்ந்து கலைஞர் கருணாநிதி எழுதிய வார்த்தைகள்

எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாம் இளைஞர்களும், மாணவர்களும் தங்களின் சுய வலிமையை உணர்ந்து, அதனைப் பெருக்கிக் கொண்டு வளர்ந்திட, வாகை சூடிட- இன்றைய சிந்தனையும் செயலும் சிறப்பாகப் பயன்படுமென்ற மன உறுதி மலைப்பாறை போல் எனக்கு உண்டு. எடுத்துக்காட்டாக என்னுயிர் நண்பர்களில் ஒருவரான கண்ணதாசனை உங்கள் முன்னால் நிறுத்துகிறேன்.

அவரது சுய வலிமைக்கும், சுய முயற்சிக்கும் இரண்டையும் பயன்படுத்தி அவர் பெற்ற வெற்றிக்கும் சான்றாக இதோ ஓர் ஆதாரபூர்வமான தகவல். இத் தகவல் 16-10-2005 தேதியிட்ட குங்குமம் வார இதழில் வெளிவந்துள்ளது. கவிஞரின் அண்ணன் ஏ.எல் சீனிவாசனின் மகனும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.எல்.எஸ்.கண்ணப்பனின் மனைவி ஜெயந்தி கண்ணப்பனிடமிருந்து கிடைத்த கண்ணதாசனின கடிதம் அது. அவர், தன் அண்ணனுக்கு எழுதிய கடிதம் அவர் விடுதியில் தங்கி, முத்தையா என்ற இயற்பெயருடன் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது, விடுதியில் தன் உபயோகத்திற்குத் தேவைப்படும் பொருள்கள் குறித்து அண்ணனுக்குப் பட்டியலிட்டு அக்கடிதம் எழுதியுள்ளார்.

என நண்பர் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது தலையணை உறையை ‘தலகாணி உரை” என்று எழுதியிருப்பது தான் நாம் கவனிக்கத்தக்கது. ஆறாம் வகுப்பு படிக்கும் போது கண்ணதாசன், முத்தையாவாக இருந்து தலையணை உறை என்பதைத் தலகாணி உரை என்று தவறாக எழுதியதற்காகத் தமிழ்த்தாய் அவரைச் சபித்துச் சாபமிட்டுவிட்டாளா? இல்லை! இல்லவே இல்லை!

தமிழ்த்தாய் அவரைத் தாவி அணைத்து வாழ்த்தி மகிழ்ந்தாள்! முயற்சிப்படிகளில் ஏறுக என்று கூறி உயர்த்திவிட்டாள்.

அதன்படி கண்ணதாசன் சுய வலிமையைப் பயன்படுத்தினார். அந்த வலிமையைப் பெருக்கும் முயற்சியில் இடைவிடாது ஈடுபட்டார்;பாடுபட்டார். தமிழாசிரியராகப் பன்மொழிப் புலவர் அப்பாதுரையாரை ஆக்கிக் கொண்டு முயற்சியால் முன்னேறினார். முறையாகத் தமிழ் கற்றார்.

சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் திரைக்கூடத்து ஒத்திகை அரங்கில் அவரை எனக்கு கவி.காமு.ஷெரீப், கவிஞர் மருதகாசி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தபோது அவருடன் இருந்த அந்தத் திரைக்கூடத்து மேலாளர் சுலைமான் என்பார் என்னிடம் கண்ணதாசனைக் காட்டி ‘சார்! இவர் இங்கே ‘சண்டமாருதம்” பத்திரிகை ஆசிரியர் ‘எழுந்தால் காள மேகந்தான்!” என்பதுபோல ‘இவர் எழுந்தால் சண்டமாருதம் தான்” என்று புகழ்ந்ததை இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது.

தொடர்ந்து பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் ‘கவிஞர்” எனப் புகழ் மகுடம் சூட்டினேன். அதன் தொடர்ச்சியாகப் புவியில் தமிழர் வாழும் இடமெல்லாம் கவியரசராகக் கோலோச்சத் தொடங்கினார்.

காலத்தின் கோலம், மாற்று முகாமில் நின்று அவர் என்னைத் திட்டித் தீர்த்த போதும் ‘உன் தித்திக்கும் தமிழுக்காக அதைப் பொறுத்துக் கொள்கிறேனய்யா!” என்றே சொல்லியிருக்கிறேன்.

திரைப்பாடல்களா? வார்த்தைகள் தாங்களாகவே வடிவமைத்துக் கொண்டு அவர் இருந்த திக்கு நோக்கித் தெண்டனிட்டன!

கற்கண்டுகளென வந்து விழும் சொற்களோ அவரைக் கரங்கூப்பித் தொழுது அவர் கட்டளைக்கேற்பக் கவிதைகளாக உருப்பெற்றன!

‘தலையணை உறை” என்பதை ”தலகாணி உரை” என்று எழுதியவர் தமிழுலகின் உச்சாணியில் ஒளியுமிழ்பவரானதற்கு சுயவலிமையும், சுய முயற்சியும்தான் தலையாய காரணம் என்பதை உணர்ந்து கொண்டால் இன்றைய இளைஞர்கள், அந்தக் காரணத்தைக் கருத்தில் பதிய வைத்துப் பணியாற்றினால் கோபுரத்துக் கலசங்களாகலாமன்றோ! அத்துடன் கொள்கை உறுதியும் இணைந்தால் கலசங்கள கலங்கரை விளக்கங்களாகவும் மாறுவது உறுதியன்றோ?

– கலைஞர் மு.கருணாநிதி