Posts from the ‘Uncategorized’ Category

கண்ணதாசனும் குணங்குடி மஸ்தானும்

இன்று குமரி அபுபக்கர் பாடிய குணங்குடி மஸ்தானின் பாடலைக் கேட்டபோது சில எண்ணங்கள் என் மனதில் ஓடின. அதை உங்களுக்கு பகிர்கிறேன்.

நம் வாழ்க்கை என்பது ஒரு பொம்மலாட்டம் போன்றது. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமெனில் “IT’S JUST A PUPPET SHOW” .

கண்ணுக்குத் தெரியாத ஒரு மெல்லிய கயிறால் நாம் இயங்குகிறோம். அதை ஆட்டுவிப்பவன் மேலிருந்து இயக்குகிறான். மெல்லிய கயிறால் ஆட்டுவிக்கும் அந்த சக்தியை அவரவர் அவரவர் இஷ்டத்திற்கு வெவ்வேறு பெயரைக் கொண்டு அழைக்கின்றனர்.

சிலர் அல்லாஹ் என்கின்றனர்.
சிலர் கண்ணா என்று விளிக்கின்றனர்
இன்னும் சிலர் நந்தலாலா என்று அழைக்கின்றனர்.

“உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா!!” என்று பாடலைத் தொடங்கும் கவிஞர் கண்ணதாசன்

‘கால் கொண்டு ஆடும் பிள்ளை
நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா
நீ சொல்லு நந்தலாலா”

என குணங்குடியாரின் பொம்மலாட்ட தத்துவத்தை வருணிக்கிறார்

அவர் சொல்ல வரும் கருத்தை ஒரே வரியில் நான் சொல்ல வேண்டுமென்றால் “LIFE IS LIKE A PUPPET SHOW” என்கிறார். அவ்வளவுதான். SIMPLE DEFINITION.

இன்னொரு பாடலில்

“ஆட்டுவித்தால் யாரொருவர்
ஆடாதாரே கண்ணா”

என்ற அதே கருத்தை வேறு பாணியில் சொல்கிறார்.

இந்த PUPPET SHOW தத்துவம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்று ஆராய்ந்துப் பார்த்தால் அது குணங்குடி மஸ்தான் பாடலில் நமக்கு காணக் கிடைக்கிறது.

//ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி//

என்று கண்ணதாசன் எழுதிய மற்றொரு பாடலில்

“ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை – இதில்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை”

என்ற தத்துவத்தை முன் வைக்கிறார். “உன் கையில் ஒன்றும் இல்லை. உன்னை ஆட்டுவிப்பவன் கையில்தான் எல்லாமே உள்ளது” என்பது இதன் உள்ளர்த்தம்.

குணங்குடி மஸ்தான் என்பவர் ஒரு மாபெரும் சித்தர், மிகப்பெரும் ஞானி என்பதை நாம் அறிவோம். அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். குமரி அபுபக்கரின் இனிமையான குரலில் இசைக்கும் இந்த தத்துவப் பாடலை இதோடு இணைத்திருக்கிறேன்

//சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
சூட்சுமக் கயிற்றினைப் பாரடா!
அதிசூட்சும கயிற்றினைப் பாரடா !!

நேத்திரம் இரண்டிலும் நேரில் இலங்கிய
நீடொளி போன்றது தேட அரிதாகி
காத்திரம் உள்ளது யாவும் பொதிந்தது
கையிலும் காலிலும் எட்டப்படாதது

சாத்திர வேதம் சதகோடி கற்றாலும்
சமயநெறிகளினால் ஆச்சாரம் பெற்றாலும்
பாத்திரம் ஏந்தி புறத்தில் அலைந்தாலும்
பாவனையால் உடல் உள்ளம் உலைந்தாலும்
மாத்திரை நேரம் எமன் வரும் அப்போது
மற்றொன்றும் உதவாது உதவாது

சூத்திரமாகிய தோணி கவிழும் முன்
சுக்கானை நேர்படுத்துஇக்கணமே சொன்னேன்

உற்ற உறவின்முறையார் சூழ்ந்திருந்தென்ன
ஊருடன் சனங்களெல்லாம் பணிந்து இருந்தென்ன
பெற்றோரும் பெண்டீரும் பிள்ளை இருந்தென்ன
பேணும் பெருஞ்செல்வம் ஆணவத்தால் என்ன

கத்தன் பிரிந்திடின் செத்த சவமாச்சு
காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு
எத்தனைபேர் நின்று கூக்குரல் இட்டாலும்
எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ — இந்த

மாயாப்பிறவி வலையை அடைத்திட
மாறாத் தியானமனத்தினில் இணைத்திட
காயாபுரிக் கோட்டை கைக்குள் அகப்பட
காணும் மணிச்சுடர் தானே விளங்கிட

ஆயும் அறிவுடன் யோகத்தினால் எழும்
ஆனந்தத் தேனை உண்டு அன்புடனே தொழும்
தாயாய் உலகத்தை ஈன்ற குணங்குடி
தற்பரனைக் கண்டு உவப்புடனே சென்று

சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
சூட்சுமக் கயிற்றினை பாரடா
அதிசூட்சும கயிற்றினை பாரடா !!//

குணங்குடியாரின் இப்பாடலில் இரண்டு விதமான தத்துவத்தை நாம் காண முடிகிறது. ஒன்று வாழ்க்கை என்பது பொம்மலாட்டம் என்ற கருத்து, மற்றொன்று வாழ்க்கை என்பது ஒரு தோணியைப் போன்றது என்ற கருத்து.

//சூத்திரமாகிய தோணி கவிழும் முன்
சுக்கானை நேர்படுத்துஇக்கணமே சொன்னேன்//

என்ற மேற்கண்ட குணங்குடியாரின் கருத்தை கலைஞர் கருணாநிதி அவர்கள்

//வாழ்க்கையெனும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்கவொண்ணா வேதம்//

என்று கூறுகிறார். மேலும் தொடர்கிறார்

//துடுப்புகள் இல்லா படகு
அலைகள் அழைக்கின்ற திசையெலாம் போகும்
தீமையைத் தடுப்பவர் இல்லா வாழ்வும்
அந்த படகின் நிலை போலே ஆகும்//

இப்பாடல் பூம்புகார் படத்தில் கவுந்தியடிகள் பாடுவதைப் போன்று காட்சி அமைந்திருக்கும்.

//உற்ற உறவின்முறையார் சூழ்ந்திருந்தென்ன
ஊருடன் சனங்களெல்லாம் பணிந்து இருந்தென்ன
பெற்றோரும் பெண்டீரும் பிள்ளை இருந்தென்ன
பேணும் பெருஞ்செல்வம் ஆணவத்தால் என்ன//

என்ற குணங்குடியாரின் கருத்துக்களைத்தான் இலகுவான சொற்களால் தோரணம் அமைத்திருப்பார் கண்ணதாசன்

ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன…?

//கத்தன் பிரிந்திடின் செத்த சவமாச்சு
காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு
எத்தனைபேர் நின்று கூக்குரல் இட்டாலும்
எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ//

என்ற குணங்குடியாரின் தத்துவக் கருத்துக்களை ‘போனால் போகட்டும் போடா’ என்ற பாடலில் இணைத்திருப்பார்.

//இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது – இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா…//

போனால் திரும்பி வராத கட்டை என்ற கருத்தைத்தான் கண்ணதாசன் அவரது பாணியில் சொல்லியிருப்பார். இந்த கட்டை என்ற சொற்பதத்தை அவர்

//பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா//

என்ற பாடலிலும் பயன்படுத்தியிருப்பார்.

இப்போது மறுபடியும் குணங்குடியாரின் பொம்மலாட்ட தத்துவத்தை வைத்து ‘போனால் போகட்டும் போடா’ பாடலை எப்படி கண்ணதாசன் முடிக்கிறார் என்று பாருங்கள்

//நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
நாலும் தெரிந்த தலைவனடா – தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா…//

ஆக அந்த சூட்சமக் கயிற்றை இயக்குபவன் சூழ்ச்சிக்கார்ர்களுக்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரனாக விளங்கும் எல்லா வல்ல இறைவன்தான் என்ற சித்தர்களின் தத்துவத்தை இந்த சாதாரண சினிமா பாட்டின் மூலம் நமக்கு கண்ணதாசன் உணர்த்துகிறார்.

#அப்துல்கையூம்

பின்குறிப்பு :
சுக்கான் : தேவையான திசையில் கப்பல் திருப்ப உதவும் கருவி

கண்ணதாசனும் என் தமிழாசிரியரும்

 

கவிஞர் நாஞ்சில் ஷா

கவிஞர் நாஞ்சில் ஷா

வாழ்க்கையெனும் இரயில் பயணத்தில் நம்மோடு பயணிப்பவர்கள் பற்பலர். அற்ப நபர்களின் நினைவுகளை, சற்று நேரத்தில், சந்திப்பு தாண்டியதும் சத்தமின்றி இறக்கி வைத்து விடுகிறோம். சொற்ப நபர்களின் நினைவுகளை மாத்திரம் கர்ப்பக்கிரகத்து சிலைகளென பத்திரமாய் நெஞ்சினில் பதுக்கி வைத்து நித்தம் நித்தம் போற்றுகிறோம்.

கன்னித்தமிழ் பெருமையினை; கணக்கின்றி எனக்கு; காலங்கடந்து நிற்கும் வகையில்; கனிவாய் எடுத்துரைத்து; கவிதைக்குரிய யாப்பிலக்கணத்தை கற்றுக் கொடுத்த – காப்பியங்கள் வடித்த – கண்ணியத்திற்குரிய மறைந்த என் தமிழாசிரியர் நாஞ்சில் ஷாவை கண்டிப்பாய் என் மனதிலிருந்து களைய இயலாது.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயருக்கு முன் “நாஞ்சில்” என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொள்வது அழகுசேர் மரபு. நாஞ்சில் கி.மனோகரன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் சம்பத் நல்லதோர் உதாரணம். நாஞ்சில் மண் பெருமைகளை நெஞ்சத்தின் மஞ்சத்தில் நிரந்தரமாய்ச் சுமந்து போற்றிய வாஞ்சைமிகு ஆசான் என்னாசான்.

அடர்த்தியான மீசை, அன்பொழுகும் பேச்சு அருந்தமிழாய் இருந்தது அவர் விடும் மூச்சு. கனிவான அவரது கன்னித்தமிழ் அரவணைப்பில் நாங்கள் கட்டுண்டுக் கிடந்தோம். வாழ்க்கைப் பயணத்தில் அவரது அறிவுரைகள் மாணவர்களாகிய எங்களுக்கு குதிரைச் சக்தியாய் இயங்கி “கமான்”… கமான்”.. என்றது. கவியரங்கம் நடத்தி என்னை நடுவராக்கி அழகு பார்த்தவர் அவர்.

நேர் நேர் தேமா ; நிரை நேர் புளிமா,
நிரை நிரை கருவிளம், நேர் நிரை கூவிளம்
நேர் நேர் நிரை தேமாங்கனி,
நிரை நேர் நிரை புளிமாங்கனி
நிரை நிரை நிரை கருவிளங்கனி
நேர் நிரை நிரை கூவிளங்கனி

என யாப்பிலக்கணத்தை வாய்ப்பாடு போல் தினமும் ஒப்பிக்கவைத்து எங்கள் மனதில் படிய வைத்தவர். தவறாக உரைத்தால் முறைப்பார்; முகத்துக்கு நேரே கடிந்தும் கொள்வார்.

நான் படித்த அதே வண்டலூர் கிரஸெண்ட் பள்ளியில்தான் கண்ணதாசனின் அருமை புதல்வன் மறைந்த என் நண்பன் கலைவாணனும் படித்து வந்தான். ஒருமுறை எங்கள் பள்ளிக்கு கண்ணதாசனை அழைத்து வந்து அவர் முன்னிலையில் என்னைக் கவிதை பாட வைத்தார் என் தமிழாசான் நாஞ்சில் ஷா..

மாணவப் பருவத்தில் கவியரங்கத்தில் நடுவராக கட்டுரையாளர்

கவியரங்கத்தில் மாணவப் பருவத்தில் மீசை வரைந்துக் கொண்டு நான் (நடுவில்)

வெண்பாவுடன் தொடங்கி ‘அழுகை’ என்ற தலைப்பில் பண்-பா படித்தேன். மண்டபத்தில் யாரும் எழுதித் தரவில்லை. சிறுவனாய் இருந்த நானே இயற்றி, நானே வாசித்தேன் அந்த நவரச நாயகன் முன்னே.

விண்ணழுதால் மழையாகும்
—வளங்கொழிக்க வழியாகும்
பெண்ணழுதால் நகையாகும்
—பணம்கரைய வழியாகும்
பொன்னழுதால் நகையாகும்
—பொற்கொல்லர் பணியாகும்
மனமழுதால் கவியாகும்
—மலையழுதால் நதியாகும்

எனத் தொடங்கி இறுதியில் //தாயழுத கண்ணீரின் தாலாட்டே நாமாகும்// என்ற வரிகளுடன் அந்த தமிழ்க்கவிதை முற்றுபெறும்..

வாசித்து முடித்ததும் வையம் புகழ் கவிஞனின் வளைக்கரம் என்னை அணைத்தது. வாயாரப் புகழ்ந்தது. ‘வசிட்டரின் வாயால் பிரம்ம ரிஷி பட்டம்’ பெற்றதை வருணிக்க வார்த்தைகளே இல்லை.

“கண்ணதாசன்” என்ற இதழுக்கு கவியரசர் ஆசிரியராக களம் கண்ட காலக்கட்டமது. அதில் “ஐயம் அகற்று” என்ற தலைப்பில் ஒரு பகுதி. மிகுதியாய் வாசிக்கப்படும் பகுதி அது. வாசகர்களின் சந்தேகத்திற்கான பதிலை வஞ்சனையின்றி வாரி வாரி வழங்குவார் கவியரசர்.

1978-ஆம் ஆண்டு ஜனவரி மாத இதழில் கவிதைவரிகளால் ஒரு கேள்விக்கணையைத் தொடுத்திருந்தார் நாஞ்சில் ஷா. கண்ணதாசன் மாத்திரம் சளைத்தவரா என்ன..? பாட்டுக்கு எசப்பாட்டு அவருக்கு அதுபாட்டுக்கு வராதா..?

நாஞ்சில் ஷா கவிதையாக கேட்ட அக்கேள்விக்கு நறுக்கென்று கவிதையாகவே பதில் தந்தார் கவியரசர். அந்தக் கவிதை கவியரசரின் வரலாற்றுப் பக்கங்களில் ஒரு வாக்குமூலமாக அமைந்து விட்டது. சரித்திரச் சான்று பகரும் சரியான சுயவிளக்கம் அது.

மலை போன்ற தத்துவத்தை
—மலை வாழைப் பழமே யாக்கி
நிலையான தமிழ்த்தேன் பாகில்
—நியமமுடன் சேர்த்து நல்கும்
கலைஞானக் கவிதை வேந்தே!
—காப்பியங்கள் ஆர்த்து ஞாலத்
தலைமேலே அமரப் போகும்
—சாதனை தான் எப்போ தென்பீர்?

“கவிதைகள், பாடல்கள் புனைந்த நீங்கள் காப்பியங்கள் பல வடித்து புவித் தலைமை கொள்ளப் போவது எப்போது…?” என்ற கவிஞர் நாஞ்சில் ஷாவின் கேள்விக்கு கவியரசர் தந்த பதில் காலங்காலமாய் மனதில் நிற்கிறது.

நோகாத மனம் வேண்டும் காலம் வேண்டும்
—நோயில்லா உடல் வேண்டும் சூழல் வேண்டும்
ஆகாத தொடர்பெல்லாம் அறுதல் வேண்டும்
—அன்றாடச் செலவுக்குப் பணமும் வேண்டும்
சாகாத காப்பியங்கள் செய்வதென்றால்
—தமிழ் மட்டும் போதாதே! என்ன செய்ய?
வாகான தெய்வத்தை வரங் கேட்கின்றேன்
—வளமான உடல்வாழ்க்கை வழங்கு மாறே!

“காப்பியங்கள் புனைவது கம்ப சித்திரமல்ல. ஆனால் அதற்கு முதற்கண் அலைக்கழிக்காத மனம் வேண்டும்; போதிய கால அவகாசம் வேண்டும்; தகாத உறவுகளை நான் களைய வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக “துட்டு காசு மணி மணி” வேண்டும்” என்று பட்டென்று பயமின்றி கூறும் மனத்துணிச்சல் கவியரசர் ஒருவருக்குத்தான் இருந்தது.

இதே பாணியை பின்பற்றித்தான் பிறிதொருமுறை “தமிழ் திரைப்பட பாடல்கள் மெட்டுக்கு பாட்டா? , பாட்டுக்கு மெட்டா?” என்ற கேள்விக்கு “துட்டுக்கு பாட்டு ” என்று சட்டென்று விட்டடித்தார் கவிஞர் வாலி.

‘நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை தமிழ்க்கூறும் நல்லுலகத்திற்கு வழங்கியவர் கவிஞர் நாஞ்சில் ஷா. 1977- ஆம் ஆண்டு “மில்லத் பிரிண்டர்ஸ்” இந்நூலை அச்சிட்டு வெளியிட்டது. இந்நூலுக்கு அணிந்துரை வேண்டும் என்று அவர் கேட்டபோது தயக்கமின்றி தமிழ்க்கவிதை யாத்துத் தந்தார் கவியரசர். இதோ அந்தக் கவிதை

நாஞ்சில் ஷா காட்டுகின்ற
—நல்ல நபி நாயகத்தை
வாஞ்சையுடன் பார்த்தபின்னர்
—மற்றவற்றைக் கற்பதற்குக்
கடைகடையாய் ஏறிக்
—கால்வலிக்க நான் நடந்தேன்;
எத்தனையோ அற்புதங்கள்
—எத்தனையோ அதிசயங்கள்
அன்னை ஆமினா
—அளித்தமகன் வாழ்க்கையிலே!”

என்று பாடினார் கண்ணதாசன். “நபிகள் நாயகள் பிள்ளைத் தமிழ்” என்ற இக்கவிதை நூலை கண்ணுற்ற பின்னர் அவருக்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறையை மென்மேலும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.

“சீனம் சென்றேனும் ஞானம் தேடுக” என்ற நபிகளாரின் பொன்மொழிக்கேற்ப மேலும் ஞானம் தேடுதற்கு நூல்களை நாடி கடைகடையாக கால்வலிக்க ஏறி இறங்குகிறார் கவிஞர். இதைத்தான் ‘அறிவுத்தாகம்’ என்கிறார்கள். “ஆமினா பெற்ர அண்ணலாரின் வாழ்க்கையில்தான் எத்தனை அதிசயங்கள்! எத்தனை அற்புதங்கள்!” என அறிந்து வியக்கிறார், மனதில் உதித்த எண்ணங்களை அப்படியே கவிதையாக வடித்து இன்புறுகிறார்.

ஒரு காலத்தில் நாத்திகம் பேசிய அதே கண்ணதாசன்தான் பின்வரும் காலத்தில் “அர்த்தமுள்ள இந்து மதம்” என்ற நூலையும், “ஏசு காவியம்” என்ற நூலையும் எழுதினார். அதே கண்ணதாசன்தான் திருமறையின் தோற்றுவாய் எனப்படும் “அல் ஃபாத்திஹா” முதல் அத்தியாயத்துக்கு எளிய நடையில் இஸ்லாமிய அறிஞர்களின் உதவியுடன் மொழிபெயர்த்தார்.

சமய பாகுபாடு பாராது உள்ளதை உள்ளபடி மனம் திறந்து பாராட்டுவது கவியரசரின் இயல்பு. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத பிள்ளை உள்ளம் கொண்ட வெள்ளை மனது சொல் வைத்து விளையாடும் அந்த சூத்திரதாரியுடையது!!!

பள்ளி மாணவர்களுடன் நாஞ்சில் ஷா (வலது கோடியில் உட்கார்ந்திருப்பவர்)

வகுப்புத்தோழர்களுடன் நாஞ்சில் ஷாவுடன் நான் (கடைசி வரிசையில் வலதுகோடியில்)

அப்துல் கையூம்
பஹ்ரைன்

கண்ணதாசன் காட்சிபடுத்திய ILLUSION

“உள்ளம் என்பது ஆமை – அதில்
உண்மை என்பது ஊமை”

Kஅன்ன

இன்னிசையுடன் கூடிய கண்ணதாசனின் இப்பாடல்வரிகளை,  இரவின் மடியில், இரண்டு கண்களையும் இறுக்கமாக மூடியபடி   இலயித்து  ரசிக்கும்போதெல்லாம், அதில் வரும் ஒவ்வொரு வரிகளுக்கும், காட்சிகள்  என்  மனக்கணினி திரை முன், தனித்தனியே Windows தானகவே திறக்கும்.

இப்பாடலின் அத்தனை வார்த்தைகளுக்கும் அருஞ்சொற்பொருள், அத்தனை வரிகளுக்கும் பதவுரை; பொருளுரை; விளக்கவுரை எழுத வேண்டுமெனில் எனக்கு நேரமும் போதாது, அதை வாசிக்க உங்களுக்கு பொறுமையும் கிடையாது.

அதில் காணப்படும் இரண்டே இரண்டு வரிகளுக்கு மட்டும் சிறிய விளக்கத்தை தர விழைகிறேன். (சிறிய விளக்கமே இம்புட்டா என்றெல்லாம் கேட்கப்படாது. )

“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
சிலை என்றால் வெறும் சிலை தான்”

இதுதான் இப்பதிவுக்காக விளக்கம் கூற முற்பட நான் எடுத்துக் கொண்ட  இருவரிகள்.

வெறும் எட்டாம் வகுப்பு வரை படித்த கவிஞர் கண்ணதாசன் எப்படி திருமூலர் கருத்துக்கள் முதல் ஷேக்ஸ்பியர், ஷெல்லி கருத்துக்கள் வரை  இரண்டிரண்டு வரிகளில், உயிரைக் குடிக்கும் வீரியம் கொண்ட சயனைடு வேதிப்பொருளை சிறிய குப்பிக்குள் அடைத்து வைப்பதுபோல், வீரியமிக்க கருத்துக்களை Auto Compress செய்து எப்படி Word Format-ல் அடக்கி வைத்தார் என்பது மில்லியன் தீனார் கேள்வி (ஏன்.?. டாலரில் மட்டும்தான் கணக்கு சொல்ல வேண்டுமா என்ன?)

இந்தக் கருத்தை கண்ணதாசன் திருமூலரிடமிருந்து காப்பிரைட் இன்றி “அலேக்காக அபேஸ்” பண்ணியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன் அல்லது Great Minds think Alike” என்ற கோட்பாட்டின்படியும்  இருக்கக்கூடும். திருமூலர் சொன்ன மூலக்கருத்தை Enlarge செய்வதற்கு ஒரு குட்டிக்கதை இங்கு தேவைப்படுகிறது.

சுரேஷும்,  ரமேஷூம் ஒரு கலைப்பொருள் கண்காட்சிக்கு செல்கிறார்கள். அங்கு பிரமாண்டமான அளவில் தேக்கு மரத்தாலான ராட்சத யானை ஒன்று செதுக்கப்பட்டு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

“வாவ்..! சூப்பர்.. என்னமா ‘ டால்’ அடிக்குது பாத்தியா இந்த தேக்கு மரம்” என்கிறான் ரமேஷ்.

“ஓ மை காட்! அட்டகாசம்..! எவ்வளவு நேர்த்தியாக செய்திருக்கிறார்கள் இந்த யானையை?. அஜீத் படம் மாதிரி அமர்க்களமாக இருக்கிறது” என்கிறான் சுரேஷ்.

காணும் காட்சி ஒன்றே. காண்பவர்களின் மனநிலை வெவ்வேறாக இருக்கிறது

இதைத்தான் திருமூலர் சொல்கிறார்

“மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை” என்று.

கண்ணதாசன் எழுதிய மற்றொரு பாடலும் கிட்டத்தட்ட இதே உட்பொருளை  கருவாகக் கொண்டதுதான் அண்ணன் தம்பிகளான 2G [அதாவது சிவாஜியும், பாலாஜியும்]  பெண்பார்க்கச் செல்கிறார்கள். ஒருவனுடைய கண்களுக்கு அப்பெண் பொன்னாகத் தெரிகிறாள். இன்னொருவன் அவள் முகத்தைக் காண்கிறான் . அது அவனுக்கு முகமாகத் தெரியவில்லை; பூவாகத் தெரிகிறது. இது என்ன உடான்ஸ் என்று கேட்கக்கூடாது. இதற்குப் பெயர்தான் Concentration.

//பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?//

இதுதான் அந்த அர்த்தம் பொதிந்த அட்டகாச வரிகள்

“கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!” என்ற பழமொழியை நாம் அடிக்கடி கையாள்கிறோம். அதன் உண்மையான உட்பொருள் வேறு. நாம் பயன்படுத்தும் சூழ்நிலை வேறு.

“கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்”

என்ற சொல்வழக்குத்தான் நாளடைவில் [GUN என்ற உயிர்கொல்லி ஆயுத எழுத்துக்களை அகற்றிவிட்டு], நாயகனை நாய் ஆக்கி விட்டது..

கோயிலுக்குச் செல்லும் ஒருவன் கல்லால் ஆன நாயகனை (கடவுளை) வெறும் கல் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் அது வெறும் கல்தான். அதேசமயம் அதனை கல் என்ற எண்ணத்தை அகற்றிவிட்டு கடவுளாகப் பார்த்தால் அது கடவுள்தான் என்று பொருள். இதைத்தான் ILLUSIONS என்று மேஜிக் செய்பவர்கள் கூறுகிறார்கள்.   நான் பள்ளியில் படிக்கையில் ஒரு மேஜிக் வித்தை செய்பவர்  எவர்சில்வர் டம்ளரில் கரண்டியால் கிண்கிணி என்று அடித்து சப்தம் உண்டாக்கி விட்டு அந்த     அதிர்வலை அடங்குவதற்குமுன் என் காதில் வைத்து “ரகுபதி ராகவ ராஜாராம்” என்ற பாடல் உன் காதில் கேட்கிறதா என்றார். என்ன ஆச்சரியம்? ஆம் கேட்டது.!!!

இதைத்தான் கண்ணதாசன் தனக்கே உரிய பாணியில் பாமரனும் புரியும் வண்ணம்

“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
சிலை என்றால் வெறும் சிலை தான்”

என்று பாடினான்.

“Concentration is the root of all the higher abilities in man” என்கிறார் மறைந்த உலகப் புகழ்ப்பெற்ற தற்காப்புக்கலை வீரர் புரூஸ்லீ.

“The secret of concentration is to shut down the other windows.”    என்கிறார் இன்னொரு யோகி

“மனதை ஒரு முகப்படுத்த கற்றுக் கொள்பவன் மகான் ஆவான்” என்கிறார் சுவாமி விவேகானந்தர் .

ஐவேளை தினந்தோறும் தொழுகும்  ஒரு முஸ்லீமுக்கு தொழுகையை விட மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி வேறு எதுவும் இருக்க முடியாது என்பது என் தாழ்மையான எண்ணம்.

வில்வித்தையில் நிபுணத்துவம் பெற்ற அர்ச்சுனன் பறவையை குறி பார்த்தபோது, அவனுக்கு அந்த பறவை அமர்ந்திருந்த மரமோ, மரத்தின் இலைகளோ, அல்லது அதற்கு பின்னால் தென்பட்ட வானமோ, அதனை சுற்றியிருந்த காட்சிகள் எதுவுமே அவன் கண்ணில் படவில்லை, ஏன் அந்த பறவைகூட அவன் கண்ணுக்கு முழுமையாகத் தெரியவில்லை, அவன் கண்ணுக்கு தென்பட்டது அப்பறவையின் கழுத்து மட்டுமே.

சீடன் ஒருவன் தன் குருவிடம் சென்று ஒரு கேள்வி கேட்கின்றான்.

“சுவாமி! நீங்கள் எங்கும் பிரம்மம் உள்ளது. அதைவிடுத்து வேறெதுவும் இங்கு இல்லை என்று உறுதியாக சொல்கின்றீர்கள், ஆனால் என் கண்களுக்கோ உலகம்தான் தெரிகின்றதே தவிர பிரம்மம் தெரியவில்லையே. ஏன் சுவாமி?”  எனக் கேட்கின்றான்
.
குருஜீ ஒரு மெல்லிய புன்னகையோடு பதில் கூறுகிறார்.

“ஒருவன் நகை வாங்க பொற்கொல்லர் இல்லத்திற்குச் செல்கிறான். அவரது அறையில் அவர் உருவாக்கிய வளையல், காப்பு, மோதிரம், தோடு கம்மல், பிள்ளையார் உருவம், போன்ற ஆபரணங்கள்   செய்யப்பட்டு அழகாக காட்சி தருகின்றன. தங்கமும், அதன் தரமும், அதன் எடையும் மட்டுமே அந்த ஆசாரிக்கு முக்கியம் அதேபோன்று போல பிரம்மத்தைதவிர வேறு எதுவும் எனக்கு முக்கியம் இல்லை.    நம்மிருவருக்குமே   காட்சி ஒன்றுதான், ஆனால் பார்க்கும் பார்வைதான் வெவ்வேறு” என்று அவனுக்கு புரிய வைத்தார்.

குருஜி முதல் புரூஸ்லீ வரை அத்தனைப்பேருடைய கருத்துக்களையும் கண்ணதாசன்

“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
சிலையென்றால் வெறும் சிலைதான்”

என இரண்டே வரிகளில் ஒரு மேஜிக்காரர் வரவழைக்கும் ILLUSION    போன்று  காட்சிகளை கொண்டுவந்து நமக்கு எளிதில் புரிய வைத்தார்.

That Is Knnadasan.

#அப்துல்கையூம்

நடிகர் திலகமும் கவிஞர் திலகமும்

ssssss

பார்அவதி கண்ணதாசன்

%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d

ஒருமுறை கவிஞர் கண்ணதாசனிடம் அவரது துணைவியார் பார்வதி அம்மாள் சென்று   “நான் மோதிரம் செய்து அணிந்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.  மோதிரத்தில் அச்சடிக்க உங்கள் கைப்பட ‘பார்வதி கண்ணதாசன்’  என்று எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.

அவரும் தன் மனைவியின் விருப்பப்படியே தன் கைப்பட எழுதிக் கொடுக்கிறார். அவர் மனைவியும் அதனை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து அவரை மீண்டும் அழைத்து ” நான் எழுதியதை சரியாக வாசித்தாயா..?” என்று புதிர் போட , அந்த வாக்கியத்தை மீண்டும் பார்வதி அம்மாள் படித்துப் பார்க்கிறார்.

அதில் “பார் அவதி கண்ணதாசன்” என்று எழுதி இருக்கிறது.

கல்யாணமான அத்தனை புருஷன்மார்களும் நம்மை போலவேதான் அவதிபடுகிறார்கள் போலிருக்கிறது.

என்ன இருந்தாலும் கவிஞர் கண்ணதாசன் அனுபவக் கவிஞர் அல்லவா..?

—அப்துக் கையூம்

 

 

அற்றைத் திங்கள்

கண்ணா 2

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் டீச்சர் எங்களுக்கு கதை சொல்லுகையில் இப்படி ஆரம்பிப்பார் “Long Long ago, So long ago; nobody knows how long ago”

கமல்ஹாசன் சில காலத்திற்கு முன்பு “அற்றை திங்கள்” என்ற காணொளி பக்கம் ஒன்றை தொடங்கினார்.

“அற்றை திங்கள் என்றால் என்ன?”

“Long Long  Ago” அல்லது “Once upon a time” என்பதை சங்கத் தமிழில் சொல்வதுதான் இந்த அற்றைத்திங்கள்.

“சிவாஜி”  படத்தில் வரும் அங்கவை, சங்கவை எனும் பாத்திரங்கள் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். முல்லைக்குத் தேர் தந்த பாரியின் மகள்களின் பெயர்கள் இவை.. எங்கள் தமிழ்க்குலப் பெண்களை எப்படி கண்ணேங் கரேலென காட்டி கிண்டல் அடிக்கலாம் என சங்கருக்கு அப்போது எதிர்ப்பு வேறு தெரிவித்தார்கள்.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.

என்று புறநானூற்றில் காணப்படும் பாடல் இந்த பாரிவள்ளல் மகள்கள் பாடியதுதான். அதன் பொருள்:

“மூவேந்தரும் முற்றுகை இட்டிருந்த அந்த நிலாக் காலத்து வெண்மையான நிலா ஒளியில் எங்கள் தந்தை எங்களுடன் இருந்தார்.. எங்களுடைய மலைக்குன்றும் அப்போது எங்களிடம்தான் இருந்தது. இந்த நிலாக் காலத்தில் அதை வென்று முரசு ஒலிக்கும் இந்த வேந்தர்கள் எங்கள் மலைக்குன்றையும் அபகரித்து விட்டார்கள். நாங்கள் எங்கள் தந்தையை இழந்து நிற்கின்றோம்”. என கையறு நிலையில் பாடிய பாடலிது.

கடந்தகாலம் பசுமையாக இருந்தால் “அது ஒரு நிலாக்காலம்” என்று நினைவுகளை அசைபோட்டு ஏக்கத்துடன் நாம் சொல்வதுண்டு.

“இருவர்” படத்தில் வைரமுத்து இந்த சங்ககால வார்த்தைகளைப் போட்டு

அற்றை திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய

ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா..?

என்று பாடல் எழுதினார்.

அதன் பின்னர் “சிவப்பதிகாரம்” படத்திற்கு கவிஞர் யுகபாரதி “உங்களுக்கு மட்டும்தான் வருமா? எங்களுக்கும் சங்கத்தமிழ் போட்டு பாடல் எழுத வரும்” என்று

அற்றைத் திங்கள் வானிடம்

அல்லிச் செண்டோ நீரிடம்

சுற்றும் தென்றல் பூவிடம்

சொக்கும் ராகம் யாழிடம்

என்று தன் கவித்திறமையைக் காட்டி அசத்தினார்.

பாரி மகளிர் அங்கவை, சங்கவை பாடிய அந்த பாடலைத்தான் கவிஞர் கண்ணதாசன் எளிமையான வரிகளில்

அன்றொரு நாள் இதே நிலவில்

அவர் இருந்தார் என் அருகே

என்று எளிமையான வார்த்தைகளில் எழுதி விட்டுப் போனார். படித்தவனுக்கு மட்டுமே புரியக்கூடிய வகையில் இருந்த கவிச்சுவையை பாமரனுக்கும் எட்டி வைத்ததால்தான் “கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு” என்று இப்போதும் பாடல் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

– அப்துல் கையூம்

பிள்ளைப் பாசம்

Kannadasan with child

சின்னச் சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ!

கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா!

பாரதி பற்றி கண்ணதாசன்

கண்ணதாசன் - பாரதி

“பாரதியோடு பலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும்.
என் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்ட செயற்கைப் பாடல்களும் உண்டு.
பாரதி முழுக்க முழுக்கத் தன்னுணர்வுக் கவிஞன்..”

இப்படி மனம் திறந்து பாரதியை பாராட்டியவர் கண்ணதாசன் …

இதோ..இன்னும் கூட பாரதி பற்றி கண்ணதாசன்…

“இன்று என் பாடல்களை நான்கு கோடி மக்கள் இரசிக்கிறார்கள்; பாடுகிறார்கள். அதைக் கண்ணால் பார்க்கும்போதும், காதால் கேட்கும்போதும் எனக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மேலும் மேலும் நான் எழுதுகிறேன். அந்த வாய்ப்பே இல்லாமற் போனவன் பாரதி.  தன் கவிதையை யார் இரசிக்கிறார்கள் என்று தெரியாமலேயே அவன் பாடினான்..

“காலம் எப்படி வரவேற்கும்; யார் எப்படி இரசிப்பார்கள்?” என்பது தெரியாமலேயே தனக்குத் தோன்றியதை எல்லாம் பாடினான். அதனால் எந்தக் கவிதையைப் பாடினாலும் தேன் வந்து பாய்கிறது காதுகளில்.

பாரதி ஒரு ஜாதிக்கு, ஒரு மதத்துக்கு உரியவனல்ல; அவன் சர்வ சமரசவாதி.
அவன் வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு தாகூருக்குப் போயிருக்காது.

துர்பாக்கியம் பிடித்த தமிழகமே!
பாரதியைக் கொண்டாடு! அதன் மூலம் பாரதத்தை நீ கொண்டாடுகிறாய்,
தேச பக்தியைக் கொண்டாடுகிறாய்,
தெய்வ பக்தியைக் கொண்டாடுகிறாய்,
தமிழ் மொழியைக் கொண்டாடுகிறாய்,
பாரதியைக் கொண்டாடாதவனுக்குத் தமிழன் என்று சொல்லிக் கொள்ள அருகதை இல்லை.”

[ கண்ணதாசன் இதழில் கண்ணதாசன்- செப்டம்பர் 1978]

Thanks to: John Durai Asir Chelliah

சுயவலிமையால் முன்னுக்கு வந்தவன் கண்ணதாசன்

கண்ணதாசனும் கருணாநிதியும்

கண்ணதாசனைப் புகழ்ந்து கலைஞர் கருணாநிதி எழுதிய வார்த்தைகள்

எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாம் இளைஞர்களும், மாணவர்களும் தங்களின் சுய வலிமையை உணர்ந்து, அதனைப் பெருக்கிக் கொண்டு வளர்ந்திட, வாகை சூடிட- இன்றைய சிந்தனையும் செயலும் சிறப்பாகப் பயன்படுமென்ற மன உறுதி மலைப்பாறை போல் எனக்கு உண்டு. எடுத்துக்காட்டாக என்னுயிர் நண்பர்களில் ஒருவரான கண்ணதாசனை உங்கள் முன்னால் நிறுத்துகிறேன்.

அவரது சுய வலிமைக்கும், சுய முயற்சிக்கும் இரண்டையும் பயன்படுத்தி அவர் பெற்ற வெற்றிக்கும் சான்றாக இதோ ஓர் ஆதாரபூர்வமான தகவல். இத் தகவல் 16-10-2005 தேதியிட்ட குங்குமம் வார இதழில் வெளிவந்துள்ளது. கவிஞரின் அண்ணன் ஏ.எல் சீனிவாசனின் மகனும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.எல்.எஸ்.கண்ணப்பனின் மனைவி ஜெயந்தி கண்ணப்பனிடமிருந்து கிடைத்த கண்ணதாசனின கடிதம் அது. அவர், தன் அண்ணனுக்கு எழுதிய கடிதம் அவர் விடுதியில் தங்கி, முத்தையா என்ற இயற்பெயருடன் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது, விடுதியில் தன் உபயோகத்திற்குத் தேவைப்படும் பொருள்கள் குறித்து அண்ணனுக்குப் பட்டியலிட்டு அக்கடிதம் எழுதியுள்ளார்.

என நண்பர் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது தலையணை உறையை ‘தலகாணி உரை” என்று எழுதியிருப்பது தான் நாம் கவனிக்கத்தக்கது. ஆறாம் வகுப்பு படிக்கும் போது கண்ணதாசன், முத்தையாவாக இருந்து தலையணை உறை என்பதைத் தலகாணி உரை என்று தவறாக எழுதியதற்காகத் தமிழ்த்தாய் அவரைச் சபித்துச் சாபமிட்டுவிட்டாளா? இல்லை! இல்லவே இல்லை!

தமிழ்த்தாய் அவரைத் தாவி அணைத்து வாழ்த்தி மகிழ்ந்தாள்! முயற்சிப்படிகளில் ஏறுக என்று கூறி உயர்த்திவிட்டாள்.

அதன்படி கண்ணதாசன் சுய வலிமையைப் பயன்படுத்தினார். அந்த வலிமையைப் பெருக்கும் முயற்சியில் இடைவிடாது ஈடுபட்டார்;பாடுபட்டார். தமிழாசிரியராகப் பன்மொழிப் புலவர் அப்பாதுரையாரை ஆக்கிக் கொண்டு முயற்சியால் முன்னேறினார். முறையாகத் தமிழ் கற்றார்.

சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் திரைக்கூடத்து ஒத்திகை அரங்கில் அவரை எனக்கு கவி.காமு.ஷெரீப், கவிஞர் மருதகாசி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தபோது அவருடன் இருந்த அந்தத் திரைக்கூடத்து மேலாளர் சுலைமான் என்பார் என்னிடம் கண்ணதாசனைக் காட்டி ‘சார்! இவர் இங்கே ‘சண்டமாருதம்” பத்திரிகை ஆசிரியர் ‘எழுந்தால் காள மேகந்தான்!” என்பதுபோல ‘இவர் எழுந்தால் சண்டமாருதம் தான்” என்று புகழ்ந்ததை இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது.

தொடர்ந்து பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் ‘கவிஞர்” எனப் புகழ் மகுடம் சூட்டினேன். அதன் தொடர்ச்சியாகப் புவியில் தமிழர் வாழும் இடமெல்லாம் கவியரசராகக் கோலோச்சத் தொடங்கினார்.

காலத்தின் கோலம், மாற்று முகாமில் நின்று அவர் என்னைத் திட்டித் தீர்த்த போதும் ‘உன் தித்திக்கும் தமிழுக்காக அதைப் பொறுத்துக் கொள்கிறேனய்யா!” என்றே சொல்லியிருக்கிறேன்.

திரைப்பாடல்களா? வார்த்தைகள் தாங்களாகவே வடிவமைத்துக் கொண்டு அவர் இருந்த திக்கு நோக்கித் தெண்டனிட்டன!

கற்கண்டுகளென வந்து விழும் சொற்களோ அவரைக் கரங்கூப்பித் தொழுது அவர் கட்டளைக்கேற்பக் கவிதைகளாக உருப்பெற்றன!

‘தலையணை உறை” என்பதை ”தலகாணி உரை” என்று எழுதியவர் தமிழுலகின் உச்சாணியில் ஒளியுமிழ்பவரானதற்கு சுயவலிமையும், சுய முயற்சியும்தான் தலையாய காரணம் என்பதை உணர்ந்து கொண்டால் இன்றைய இளைஞர்கள், அந்தக் காரணத்தைக் கருத்தில் பதிய வைத்துப் பணியாற்றினால் கோபுரத்துக் கலசங்களாகலாமன்றோ! அத்துடன் கொள்கை உறுதியும் இணைந்தால் கலசங்கள கலங்கரை விளக்கங்களாகவும் மாறுவது உறுதியன்றோ?

– கலைஞர் மு.கருணாநிதி

“கோயம்புத்தூர்” பெயர்க்காரணந்தெரியுமா உங்களுக்கு..?


நம் கவியரசர் கண்ணதாசனவர்கள்
கூறுகின்ற விளக்கத்தை பாரீர்.

கன்னியரின் இதழழகை கோவையென்பார்!

கனிமழலை முழுவடிவை கோவையென்பார்!

தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு.
திறமான கவிதொகுத்த கோவை யுண்டு.

இந்நகரை “கோவை” என ஏனழைத்தார்?

எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்?

என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர்
இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!

வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின்
மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்.

செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற
செங்குட்டுவன் ஒருவன்.
தமிழெடுத்து
அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்
அடுத்தொருவன்.

இவ்விருவர் குறிப்பும் பார்த்து
பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான்
பேதையொரு வேதாந்தி.

அதனைக்கேட்டு
முன்னவனே நாடாள வேண்டுமென்று
முடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்
தன்னாட்டின் எல்லையிலோர் குடிலமைத்தான்.
தனியாக சாத்தனுடன் தங்கிவிட்டான்.

அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர்
அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து
இந்நாளில் கோயம் புத்தூ ராயிற்று..!

இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று!

நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து
நெளிந்துவரும் தென்றலினை வளையவிட்டுப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்
பண்பினையும் அன்பினையும் துணைவர் ஆக்கி
வாழுங்கள் எனவிட்டாள் தமிழ் மூதாட்டி!

வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!

சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!

சுவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!

ஏனுங்க! என்னவுங்க! ஆமா முங்க!
இருக்குங்க! சரியிங்க! பாக்க வாங்க!
மானுங்க! வேணுங்களா! வாங்கிக் கோங்க!
மலைப் பழமும் இருக்குங்க! எடுத்துக்கோங்க!
தேனுங்க! கையெடுங்க! சாப்பிடுங்க!
திருப்பூரு நெய்யுங்க! சுத்த முங்க!
ஏனுங்க! எழுந்தீங்க! உக்காருங்க!
ஏ, பையா! பாயசம் எடுத்துப் போடு!

அப்பப்பா! கோவையிலே விருந்து வந்தால்
ஆறுநாள் பசிவேண்டும்!
வயிறும் வேண்டும்!

தப்பப்பா! கோவைக்கு வரக்கூடாது!
சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!

ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்!

உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!
கொடுத்தவரை பாடுவ தெம்குல வழக்கம்

கொடைக்கெனவே படையெடுத்தோர் புலவர் பல்லோர்
இனித்தசுவைப் பழங்கொடுத்த வள்ளல் பற்றி
இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி
தனித்தனியே கனிவைத்துத் தேனும் வைத்துத்
தந்தானைப் புகழ்ந்தானே கம்பன் அன்றும்
கொடுத்தவனைப் புகழ்வதுதான் புலவன் பாட்டு
குறையெதற்கு?

நானுமதைச் செய்துவிட்டேன்.

நன்றி – ஃபீனிக்ஸ் பாலா